இன்றைய சமூகத்தில் ஏழை, பணக்காரர்கள் என்ற இரு பிரிவினர் இருக்கின்றனர். ஒருவன் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அவனது உயர்வு என்பது சிறிய அளவாகத் தான் இருக்கும். ஒரு சிலர் பெரிதளவில் கடின உழைப்பு எதுவும் இல்லாமல் விரைவில் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வார்கள். இதனைத் தான் அதிர்ஷ்டம் இருந்தால் ஆண்டியும் அரசனாவான் என்றும், அதிர்ஷ்டம் இல்லை என்றால் அரசனும் ஆண்டியாவான் என்றும் சொல்வார்கள். அதுபோல எவ்வளவு உழைப்பும், உறுதியும் இருந்தாலும் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றால் எதுவும் கைகூடி வருவதில்லை. எனவே அதிர்ஷ்டத்தை எப்பொழுதும் நம்மிடம் தக்கவைத்துக்கொள்ள, அஷ்டலட்சுமிகளும் நமது வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும். அவ்வாறு அஷ்டலட்சுமிகளை நமது வீட்டிற்குள் அழைக்க இந்த கலச பூஜையை தவறாமல் செய்திடுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஒரு சிலர் கலசம் வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ ஏதாவது விசேஷ நாட்களின் பொழுது மட்டும் கலசத்தை வைத்து வழிபடுவார்கள். ஆனால் அஷ்டலட்சுமிகளும் நமது வீடு தேடி வர இந்த கலச பூஜையை வளர்பிறை நாட்களில் வரும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும்.
வளர்பிறை நாட்களின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவற்றில் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை மட்டும் செய்தால் போதும். இதற்கு வீட்டில் உள்ள நபர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து, இந்தப் பூஜையை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த பூஜைக்கான முழு பலன் கிடைக்கும்.
இதற்கு முதலில் ஒரு கலச சொம்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அது வெள்ளி, பித்தளை, செம்பு அல்லது மண் கலசம் இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். முதலில் அதனை சுத்தமாக கழுவிக் கொண்டு, அதன் மீது முழுவதுமாக மஞ்சள் பூசிக்கொண்டு, ஒற்றைப்படையில் குங்குமப்பொட்டு வைக்க வேண்டும்.
பிறகு சொம்பினுள் முக்கால் பங்கு தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு பன்னீர் மற்றும் பச்சை கற்பூரத்தை கைகளால் நன்கு பொடியாக்கி சேர்க்கவேண்டும். பின்னர் இதில் சிறிதளவு மஞ்சள், குங்குமம் சேர்க்க வேண்டும். அதன் பின் ஒரு வெற்றிலை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதன் மீது சிறிதளவு பச்சை அரிசி வைத்து, அதற்கு மேல் இந்த கலசத்தை வைக்கவேண்டும்.
பின்னர் இதனை பூஜை அறையில் வைத்து விட்டு, ஒரு கைப்பிடி பச்சை அரிசி எடுத்துக்கொண்டு, மகாலட்சுமி மற்றும் அன்னபூரணி தாயை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். எனது வீட்டில் எப்பொழுதும் தானியம் மற்றும் உணவிற்கான பற்றாக்குறை இருக்கக்கூடாது என்று வேண்டி அரிசியை கலசத்தில் போட வேண்டும்.
பிறகு உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அத்தனை எண்ணிக்கையில் ஏலக்காய் மற்றும் கிராம்பை சேர்க்க வேண்டும். அதாவது நான்கு நபர்கள் இருந்தால் 4 ஏலக்காய், 4 கிராம்பு சேர்க்க வேண்டும். பின்னர் குடும்ப உறுப்பினர் அனைவரும் கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு, அஷ்டலட்சுமிகளின் பெயரை சொல்லி, ஒரு ரூபாய் நாணயத்தை கலசத்தில் போட்டு, ஒவ்வொருவராக கலசத்தை தொட்டுக் கும்பிட்டு, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். மறுநாள் இந்த கலசத்தில் இருக்கும் நீரை செவிக்கு ஊற்றி, அதில் இருக்கும் அரிசியை காக்கை மற்றும் எறும்பிற்க்கு வைத்துவிடலாம்.