4 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. இட்லி, தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பரான காரசாரமான பூண்டு சட்னி! வெங்காயம் தக்காளி தேவை இல்லை.

poonu-chutney
- Advertisement -

ஃப்ரிட்ஜில் வைக்க வில்லை என்றாலும், இந்தச் சட்னி நான்கு நாட்களுக்கு நன்றாக இருக்கும். பூண்டை வைத்து சுவையான காரசாரமான ஆரோக்கியமான ஒரு சட்னி ரெசிபியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரெசிபியை பார்த்திடலாம். முதலில் ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கெட்டிப் பதத்தில் புளியை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

poonu-chutney1

அடுத்தபடியாக ஒரு 3 முழு பூண்டுகளை தோலுரித்து சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைத்தும் கொள்ள வேண்டும். முடிந்தால் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளலாம். ஒரு சிறிய உரலில் போட்டு நசுக்கியும் எடுத்துக் கொள்ளலாம் அது உங்களுடைய இஷ்டம். ஆனால் பூண்டினை முழுமையாக அறைந்து விட்டால் இந்த சட்னி நன்றாக இருக்காது. பூண்டு கொரகொரப்பாக தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, 1 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளித்து, துருவி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயில் சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பூண்டை வதக்க வேண்டும். பூண்டு கருகிப் போய் விடக் கூடாது. அதே சமயம் பச்சை வாடையும் வீசக் கூடாது.

poonu-chutney3

1 ஸ்பூன் வர மல்லியை இடுக்கியில் போட்டு இடித்து நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பூண்டினை பச்சை வாடை போக வதக்கிய பின்பு, ஒரு 1 ஸ்பூன் இடித்து வைத்திருக்கும் வர மல்லியை பூண்டுடன் சேர்க்க வேண்டும். அடுத்தபடியாக 1 டேபிள்ஸ்பூன் அளவு தனி மிளகாய்த் தூளை எண்ணெயில் சேர்த்து பூண்டுடன் நன்றாக வதக்கவேண்டும். மிளகாய் தூள் கருதிவிடக்கூடாது எக்காரணத்தைக் கொண்டும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு நிமிடம் போல் மிளகாய்த்தூளை பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கினால் போதும்.

- Advertisement -

அடுத்தபடியாக 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்தூளின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 3 லிருந்து 4 நிமிடங்கள் இந்த சட்னி நன்றாக கொதித்தவுடன் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்த்து உப்பு காரத்தை சரிபார்த்துக் கொள்ளவும். புளியின் பச்சை வாடை போகும் வரை மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

poonu-chutney2

பார்ப்பதற்கு நன்றாக தெரியும். நாம் ஊற்றிய எண்ணெய் அனைத்தும் பிரிந்து மேலே மிதந்து வரும் பட்சத்தில், சட்னி பக்குவத்தில் வரும்போது, இறுதியாக 1/4 ஸ்பூன் பெருங்காயம், சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள் போதும். சூப்பரான பூண்டு சட்னி வித்யாசமான முறையில் தயார். இதை பிரிட்ஜ் இல்லாமலேயே 4 நாட்கள் வரை கூட வெளியில் வைத்து சாப்பிடலாம். அருமையான சுவையில் செய்த இந்த பூண்டு சட்னி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -