சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே போகிறது என்ற எண்ணம் வந்ததால் சிவனை நோக்கி தவம் செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் சூரிய பகவானை தனியாக விட்டு செல்ல அவருக்கு மனம் இல்லாததால் தன்னுடைய நிழலை கொண்டு சாயாதேவி என்றொரு பெண்ணை தன்னை போல உருவாக்குகிறார். பின் சாயாதேவியம் தான் இருந்து செய்யவேண்டிய அனைத்தையும் நீ செய்யவேண்டும் என்று கூறிவிட்டு குதிரை வடிவம் எடுத்து சிவனை நோக்கி தவம் இருக்க செல்கிறார் உஷா தேவி.
சூரிய பகவானும் சாயாதேவியை உஷா தேவி என்று நினைத்து அவரோடு வாழ்கிறார். அவர்கள் இருவருக்கும் கிருதவர்மா (சனி) என்ற ஆண் குழந்தையும், தபதி என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. தாயின் சாயல் சனிபகவானுக்கு வந்ததால், நிழலை போன்று கருமையான நிறத்தில் இருக்கிறார். சிறுவயதில் இருந்தே சனிபகவானின் செயல்கள் சில சூரியபகவானுக்கு பிடிக்கவில்லை. இதனால் சூரிய பகவான் சனிபகவானை காட்டிலும் மற்ற குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் தந்தையின் அன்பிற்காக ஏங்கிய சனி பகவான் வளர வளர தந்தையின் மீது வெறுப்பு கொள்கிறார். ஒரு கட்டத்தில் தந்தையை தன் விரோதியை போல நினைக்க துவங்குகிறார். தன்னுடைய தந்தையை காட்டிலும் தான் சக்தி படைத்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி காசிக்கு சென்று அங்கு லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்கிறார்.
பின் பல்லாண்டு காலம் சிவனை நோக்கி கடுந்தவம் புரிகிறார். சனிபகவானின் பக்தியை கண்டு மெய்சிலிர்த்த சிவ பெருமான் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். நவகிரகங்களில் ஒருவராய் இருக்க வேண்டும், நவகிரங்களில் தன்னுடைய பார்வைக்கே வலிமை அதிகமாக இருக்க வேண்டும், தன் தந்தையை விடவும், தன் உடன் பிறந்தவர்களை விடவும் பலசாலியாக இருக்க வேண்டும் , சுருக்கமாக சொல்லப் போனால் உங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தரவேண்டும் என்று வரம் கேட்டார்.
சனியின் தவப்பயன் காரணமாக ஈசன் அவர் கேட்ட வாரங்கள் அனைத்தையும் தந்தருளினார். அன்று முதல் சனீஸ்வரன் என்று அவர் அழைக்கப்பட்டார். ஈஸ்வரனிடம் இருந்து பல அற்புத வரங்களை பெற்றதால் சனியை கண்டு இன்றுவரை தேவாதி தேவர்கள் முதற்கொண்டு பலரும் அஞ்சுகின்றனர். ஆனால் சனிக்கே தொல்லை கொடுத்தவர்கள் அனுமனும் விநாயகரும் என்று பல புராண கதைகள் கூறுகின்றன.
பாப கிரகங்கள் வரிசையில் முதலிடம் வகிக்கும் இவரின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை ஆகும். காசியில் சிவபெருமானிடம் சனீஸ்வரன் வரம் பெற்ற பிறகு திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயிலிற்கு வந்து சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. திருநள்ளாறில் சனீஸ்வரனுக்கு இப்போது தனி சந்நிதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:
சனிபகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா ?
இது போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.