நாவில் கரையும் ஸாஃப்ட் சப்பாத்தி நீங்களும் செய்யணுமா? அப்போ இந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க!

- Advertisement -

சப்பாத்தி சுடுவது ஒன்றும் கம்பு சுத்துற வேலை இல்லைங்க! பலருக்கும் சப்பாத்தி சாஃப்ட்டாக வரவில்லையே என்கிற ஏக்கம் இருக்கும். என்னதான் செய்வது எவ்வளவு மெனக்கெட்டலும் சப்பாத்தி மட்டும் சாஃப்டாக வரவில்லையே என்று புலம்புபவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும். இதே முறையில் நீங்கள் செய்தால் உங்கள் சப்பாத்தியும் நாவில் வைத்தவுடன் கரைந்து விடும் அளவிற்கு ரொம்ப ரொம்ப சாஃப்ட்டாக இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற ரகசியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

chappathi

பூரி போல சப்பாத்தி உப்பி வரவும், சாஃப்ட்டு சாஃப்ட்டு சப்பாத்தி செய்யவும் முதலில் சப்பாத்தி பிசைய தேவையான குறிப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் சப்பாத்தி மாவு பிசையும் பதத்தில் தான் சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். சப்பாத்தி சாஃப்ட்டாக வந்தே ஆக வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

முதலில் தேவையான அளவிற்கு கோதுமை மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். சப்பாத்தி மிருதுவாக வர அதிக விலை கொடுத்து காஸ்ட்லி கோதுமை மாவு தான் வாங்க வேண்டும் என்று இல்லை. ரேஷன் கடையில் கொடுக்கும் கோதுமை மாவு கூட போதும், அவ்வளவு சாஃப்டான சப்பாத்தி சுட்டு விட முடியும். மாவுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்ப்பதால் நீங்கள் சப்பாத்தி சுடும் பொழுது ஆங்காங்கே பிரவுன் நிறத்துடன் பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் நன்றாக வெந்து வரும்.

chappathi

பின்னர் தயிர் ஒரு 3 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் சேர்க்கும் அளவு தோராயமானது தான், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதனை சேர்த்துக் கொள்ளலாம். மாவை நன்கு கலந்த பின்பு நெய் அல்லது எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். நீங்கள் சமையல் செய்ய பயன்படுத்தும் எந்த எண்ணெயாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் நன்கு கலந்த பின்பு சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி மாவைப் பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சப்பாத்தி மாவு கையில் ஒட்டாத அளவிற்கே பிசைய வேண்டும் என்று இல்லை. பரோட்டாவுக்கு மாவு தட்டுவது போல நன்கு வளவளவென்று, தளதளவென்று சாஃப்ட்டாக வர வேண்டும். கைகளில் ஒட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. பயப்படத் தேவையில்லை. மாவு எல்லா பக்கமும் ஒன்று போல திரண்டு வரும் பொழுது சமன்படுத்தி அதில் எண்ணெய் ஊற்றி தடவிக் கொள்ள வேண்டும். தொட்டவுடன் கை விரல்கள் உள்ளே செல்லும் அளவிற்கு மாவு மென்மையாக இருக்க வேண்டும்.

chappathi-maavu

பின்னர் அதனை பத்து நிமிடம் அப்படியே விட்டு ஒரு ஈரத் துணியில் காற்று புகாதவாறு சுற்றி ஏர் டைட் கண்டைனைரில் வைத்து விட வேண்டும். இந்த மாவு ட்ரையாக இல்லாமல் சற்று தளர்வாக இருப்பதால் நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை கூட எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த மாவை குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து அதன் மீது கொஞ்சமாக கோதுமை மாவை தூவி உருண்டைகள் பிடித்து கொள்ள வேண்டும்.

பின் அழுத்தம் கொடுக்காமல் லேசாக வைத்து வட்டமாக தேய்த்து தவாவில் சுட்டு எடுத்தால் ரொம்ப ரொம்ப சாப்ட்டாக நாவில் கரையும் அளவிற்கு சப்பாத்தி வெந்து வரும். நீங்கள் இரவு செய்து வைத்து விட்டு காலையில் கூட சுட்டுக் கொள்ளலாம். காலையில் செய்து வைத்து இரவில் கூட சுட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் கூட கடினமாக இல்லாமல் மிருதுவான சப்பாத்தி நிச்சயம் உங்களுக்கு வரும், நீங்களும் இதே முறையில் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -