தினமும் காலை, மாலை உணவு என்றாலே இப்பொழுதெல்லாம் இட்லி, தோசை என்பது வழக்கமாக மாறிவிட்டது. இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி, சாம்பார் என்பதும் மாறாமல் இருக்கிறது. ஆனால் உடலுக்கு ஆரோக்கியமான காய்கறி வகைகளை இந்த இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடும் வகையில் சுவையாக செய்து கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும். அவ்வாறு புடலங்காய் வைத்து செய்யக்கூடிய ஒரு கிரேவியை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனை இட்லி, தோசையுடன் மட்டுமல்லாமல் தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம் இவ்வாறு வெரைட்டி சாதத்துடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் புடலங்காயின் மேல் உள்ள தோலை கத்தி வைத்து கீறி கொள்ள வேண்டும். பின்னர் புடலங்காயை குறுக்கில் அறிந்து கொண்டு, அதன் உள்ளிருக்கும் விதைகள் மற்றும் தசை போன்ற பகுதியை நீக்கி விட வேண்டும். பின்னர் புடலங்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் இரண்டு வெங்காய மற்றும் தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கால் ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் புடலங்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். புடலங்காய் வெந்து வருவதற்கு முதலில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் மூடியை திறந்து நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கலந்து விட்டு, மூடி போட்டு வேக வைக்கவேண்டும். சிறிது நேரத்தில் இவை அனைத்தும் நன்றாக கொதித்து, சற்று கெட்டியான பதத்திற்கு வரும்போது, கொத்தமல்லித் தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான புடலங்காய் தொக்கு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தயாராகிவிட்டது.