குரு பெயர்ச்சி அன்று செல்லவேண்டிய மிக சிறந்த கோவில்

gurul
- Advertisement -

முன்னூரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் ஆலயம், குரு பெயர்ச்சி அன்று செல்லக்கூடிய ஒரு மிக சிறந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு சிவனே குருவாய் எழுந்தருளி இருக்கிறார். ‘முன்னூருக்கு சென்றால் நிச்சயம் முன்னுக்கு வரலாம்’ என்பது நம்பிக்கை.

சிவாலயங்களில் சிவபெருமான் பொதுவாக கிழக்கு நோக்கியே காட்சி தருவதையும், தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருவதையும் நாம் தரிசித்திருப்போம். ஆனால், தரிசிப்பவர்களின் வினைகளைக் களைந்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண அருளும் ஐயன் ஆடவல்லீஸ்வரர் இங்கே ஞான குருவாக தெற்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள்.

- Advertisement -

ஐயனே தென்முகக் கடவுளாக எழுந்தருளி இருப்பதன் பின்னணி, நமக்கு அரியதொரு தத்துவத்தை உணர்த்துகிறது. ‘ஒருவர் எத்தனைதான் உயர்ந்தவராக இருந்தாலும், அவர் தேவராக இருந்தாலும் கர்வம் மட்டும் இருக்கக் கூடாது’ என்பதுதான் அந்தத் தத்துவம். சராசரி மனிதர்களுக்கே கர்வம் கூடாது என்னும்போது, குருவாக அதிலும் தேவர்களுக்கெல்லாம் குருவாகத் திகழும் குரு பகவானுக்கு கர்வம் ஏற்படலாமா?

அப்படி ஒருமுறை தேவர்களின் குருவாகவும், நவகிரகங்களில் ஒருவராகவும் திகழும் குரு பகவானுக்கு கர்வம் ஏற்பட்டது. அடுத்த கணமே குரு பகவான் தன் தேஜஸை எல்லாம் இழந்து விட்டார். தன்னுடைய தேஜஸ் இழந்தது தெரியாமல் அவர் தேவசபைக்கு சென்றபோது, இந்திரன் உள்ளிட்ட எவருமே அவரை வரவேற்று உபசரிக்கவில்லை. அப்போதுதான், தான் கொண்ட கர்வம் தன்னுடைய தேஜஸை இழக்கச் செய்துவிட்டது என்பது குரு பகவானுக்குத் தெரிந்தது. தன்னுடைய ஞானமும் தன்னிடமிருந்து விலகிவிட்டதையும் தெரிந்துகொண்டார்.

- Advertisement -

navagaraga

 

கொண்ட கர்வத்துக்கு மனம் வருந்தி பிரம்மதேவரிடம் சென்று வேண்டினார். குருவின் நிலை கண்டு இரங்கிய பிரம்மதேவர், ‘`பூவுலகில் அமைந்திருக்கும் முன்னூற்று மங்கலம் என்னும் தலத்தில், அம்பிகையுடன் நடனம்புரிந்து ஆனந்த மயமாகத் திகழும் ஐயன் ஆடவல்லீஸ்வரரை தரிசித்து வழிபட்டால், நீ இழந்த தேஜஸும், ஞானமும் திரும்பப் பெறுவாய்’’ என்று கூறினார்.

- Advertisement -

பிரம்மதேவர் கூறியபடியே தற்போது முன்னூர் என்று அழைக்கப்படும் முன்னூற்று மங்கலத்துக்கு வந்த குரு பகவான், ஆடவல்லீஸ்வரரை வழிபட்டு, இழந்த தேஜஸையும், தொலைத்த ஞானத்தையும் திரும்பப் பெற்றார் என்கிறது தலபுராணம்.

guru bagvaan kovil

அற்புதமான இந்தத் தலத்தில், வரும் குருப்பெயர்ச்சியையொட்டி ( 2.9.17- சனிக்கிழமை) மாபெரும் குருப்பெயர்ச்சி பரிகார ஹோமமும்  சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன(காலை 9 மணி முதல் பகல் 1:00 மணி வரை). இந்த ஹோமத்தில் கலந்துகொள்வதன் மூலம் குருவருளையும் திருவருளையும் ஒருங்கே பெற முடியும்.

செல்லும் வழி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரில் இருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவு பயணித்தால், முன்னூர் கிராமத்தையும் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம். திண்டிவனம் – முன்னூர் இடையே 22-ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயங்குகிறது. எனினும், பஸ் வசதி குறைவுதான். ஆலங்குப்பத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.

- Advertisement -