திருநெல்வேலி சொதி குழம்பு சுவையாக எளிதாக எப்படி நம் வீட்டிலும் சமைக்கலாம் என்று பார்ப்போமா? இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், சாதத்திற்கு செமையா இருக்கும்.

- Advertisement -

திருநெல்வேலி சொதி குழம்பு இட்லி, தோசை, ஆப்பம், சூடான சாதம் என்று எல்லாவற்றுக்குமே சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த சொதி குழம்பு முற்றிலும் தேங்காய் பால் கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பால் மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் இந்த ஆரோக்கியமான சொதி குழம்பு சுவையாக நம் வீட்டிலும் எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

திருநெல்வேலி சொதி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
முழு தேங்காயை – 1, பச்சை மிளகாய் – 5, இஞ்சி துண்டு – ஒரு விரல் நீளம், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வர மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பூண்டு பல் – 2, சின்ன வெங்காயம் – 10, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் – தலா ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு – அரை கப், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

திருநெல்வேலி சொதி குழம்பு செய்முறை விளக்கம்:
சொதி குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு முழு தேங்காயை துருவி எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கெட்டியான முதல் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் சக்கையை மிக்ஸி ஜாரில் போட்டு மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து இரண்டாவது தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் மீதமிருக்கும் சக்கையை போட்டு கடைசியாக தண்ணீர் ஊற்றி அரைத்து நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று அளவுகளில் தேங்காய் பாலை நாம் இப்போது எடுத்து வைத்திருக்கிறோம்.

சின்ன வெங்காயம் மற்றும் மற்ற காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். இவை பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு இணுக்கு கறிவேப்பிலை மற்றும் 2 வர மிளகாய்களை கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். கொஞ்சம் போல் மஞ்சள் தூள் விருப்பமிருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். சிலர் வெள்ளையாக சொதி செய்வது உண்டு. இதனுடன் இரண்டு பூண்டு பற்களை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை வாணலியில் சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். அதன் பிறகு நீங்கள் நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். 2 நிமிடம் இவற்றை வதக்கிய பின்பு மூன்றாவதாக எடுத்த தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பத்து நிமிடம் தேங்காய் பாலுடன் சேர்த்து காய்கறிகள் அனைத்தும் கொதித்து வந்த பிறகு இரண்டாவதாக எடுத்து வைத்த தேங்காய் பாலை சேர்த்து அதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு கால் கப் அளவிற்கு சேர்க்க வேண்டும். அப்போது தான் சொதி கெட்டியாக வரும். பாசிபருப்பு இல்லை என்றால் பொட்டுகடலை 2 டேபிள் ஸ்பூன் கெட்டியாக அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவை கொதித்ததும் முதலில் எடுத்த பாலை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொள்ள வேண்டும். பின்பு இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாகத் தான் உப்பு சேர்க்க வேண்டும். இல்லை என்றால் சொதி திரிந்துவிடும். ஒரு கொதி வந்ததும் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த சுவையான திருநெல்வேலி சொதி இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -