சொந்த தொழில் சிறப்பாக நடக்க வழிபாடு

own business
- Advertisement -

தன்னுடைய வாழ்க்கையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த வேலையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். பிறரிடம் வேலை செய்வதற்கு பதிலாக நாமே சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டு அந்த கடையை போல அல்லது அந்த கடையை விட பெரிய அளவில் சொந்தமாக கடை நடத்த வேண்டும் என்பது பலரின் லட்சியமாகவே இருக்கும். அப்படி தொழிலாளியாக இருந்து படிப்படியாக முன்னேறி முதலாளி ஆவதற்கும், முதலாளி ஆன பிறகு அவர்களுடைய தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கக் கூடியவர்களாக திகழ்பவர்கள் புதன் பகவானும் சுக்கிர பகவானும்தான். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவானும் சுக்கிர பகவானும் சிறப்பாக இருந்தால் அவர்கள் கண்டிப்பான முறையில் தொழிலதிபர்களாக ஆவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். இன்னும் சிலரின் ஜாதகத்தில் அவர்கள் சொந்தமாக தொழில் செய்வார்கள் என்றும் கூறப்படும். அப்படி சொந்தமாக தொழில் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்தால் கண்டிப்பான முறையில் சொந்தமாக தொழில் செய்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

ஜாதகத்தில் புதன் பகவானும் சுக்கிர பகவானும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி அவர்கள் வலுவிழந்து விட்டால் ஒருவரால் சொந்தமாக தொழில் ஆரம்பிக்க முடியாது. அப்படியும் அவர்கள் சொந்தமாக தொழில் ஆரம்பித்தாலும் அந்த தொழிலில் சிறந்து விளங்க முடியாது என்று ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. இப்படி புதன் மற்றும் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

புதன் பகவானுக்குரிய தானியமாக திகழ்வது பச்சைப்பயிறு. மேலும் புதன் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடியவர் பெருமாள். புதன் பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவது புதன்கிழமை. அதனால் புதன்கிழமை தோறும் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பச்சை பயிரில் பாயாசம் செய்து அவருக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு இந்த பாயாசத்தை தானமாக தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் புதன் பகவானின் அருளை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

இதேபோல் சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை. சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதியாக திகழ் பவர் மகாலட்சுமி தாயார். சுக்கிர பகவானுக்குரிய தானியமாக திகழக் கூடியது வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய இனிப்பு பொருட்கள். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசத்தை நெய்வேத்தியமாக படைத்துவிட்டு இந்த பால் பாயாசத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருளை பெற முடியும்.

9, 11, 15 என்ற எண்ணிக்கையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் இந்த வழிபாட்டை செய்துவர கண்டிப்பான முறையில் புதன் மற்றும் சுக்கிர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து நாம் சொந்த தொழில் செய்வதற்கும் சரி சொந்த தொழிலில் சிறப்பாக விளங்குவதற்கும் சரி பெரிதும் துணை புரிவார்கள்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக ராமநவமி வழிபாடு

மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்கள் கண்டிப்பான முறையில் சொந்தத் தொழிலில் சிறந்து விளங்குவார்கள்.

- Advertisement -