மனிதனாக பிறப்பெடுப்பதற்கு காரணமே, நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளே. அந்த கர்ம வினைகளை நாம் தீர்ப்பதற்கு நாம் பிறந்த திதியில் அதற்குரிய அதி தேவதையை வழிபட வேண்டும். அவ்வாறு நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளை தீர்ப்பதோடு, நம்முடைய விதியையும் மாற்ற இயலும். இந்த பதிவில் நாம் திதிகளுக்குரிய அதி தேவதைகள் குறித்தும், திதி தேவதை வழிபாடு (Thithi devathai vazhipadu) குறித்தும் பார்ப்போம் வாருங்கள்.
நாம் தகுதியோடும், வெற்றியோடும் வாழ்வதற்கு திதி வழிபாடு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. நம் வாழ்வில் கடவுளிடம் வேண்டுதல் வைத்து அந்த வேண்டுதல் நிறைவேறவில்லை என்றால், அந்த வேண்டுதலை நம்முடைய பிறந்த திதிக்குரிய அதிதேவதை இடம் வைக்கும் பொழுது, அது கண்டிப்பான முறையில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இப்பொழுது திதிகளையும் அதற்குரிய அதி தேவதைகளையும் பார்ப்போம்.
திதி தேவதைகள்
திதி | வளர்பிறை திதி தேவதை | தேய்பிறை திதி தேவதை |
---|---|---|
பிரதமை | குபேரன், பிரம்மா | துர்க்கை |
துவதியை | பிரம்மா | வாயு |
திருதியை | சிவன், கௌரி | அக்னி |
சதுர்த்தி | எமன், விநாயகர் | எமன், விநாயகர் |
பஞ்சமி | திரிபுரசுந்தரி | நாகதேவதை |
சஷ்டி | செவ்வாய் | முருகன் |
சப்தமி | ரிஷி, இந்திரன் | சூரியன் |
அஷ்டமி | காலபைரவர் | மகா ருத்ரன், பைரவர் |
நவமி | சரஸ்வதி | சரஸ்வதி |
தசமி | வீரபத்திரர், தர்மராஜன் | எமன் |
ஏகாதசி | மகா ருத்ரன், மகாவிஷ்ணு | மகாருத்ரன், மகாவிஷ்ணு |
துவாதசி | மகாவிஷ்ணு | சுக்ரன் |
திரியோதசி | மன்மதன் | நந்தி |
சதுர்த்தசி | காளி | ருத்ரர் |
பௌர்ணமி | லலிதாம்பிகை | - |
அமாவாசை | - | பித்ருக்கள், காளி |
திதி தேவதை வழிபாடு
நாம் பிறந்த திதிக்குரிய அதி தேவதையை நாம் தினமும் குறைந்தது ஐந்து நிமிடமாவது வணங்க வேண்டும். அந்த அதி தேவதைக்குரிய அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்யலாம் அல்லது அதிதேவதைக்குரிய மந்திரத்தை கூறலாம். மேலும் அவர்களின் திருவுருவப்படத்தை பார்ப்பதும் நினைப்பதும் மிகவும் சிறப்புக்குரியது.
மேலும் வாசனை மிகுந்த மலர்களால் அதி தேவதையின் திருவுருவப்படத்திற்கு அர்ச்சனை செய்வதன் மூலம் நமக்கு அளப்பரிய பலன்கள் கிடைக்கும். நம் பிறப்பில் இருக்கும் கர்ம வினைகள் அனைத்தையும் குறைத்து, நாம் செய்ய வேண்டிய செயல்களையும், நம்முடைய எண்ணங்களையும் சீர்படுத்தி நமக்கான நற்பலன்களை அதிதேவதை மிகுதியாக கிடைக்கச்செய்ய உதவுகிறது அதிதேவதை வழிபாடு.
இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ராமபிரானை கூறலாம். அவர் பிறந்த திதியில் அதி தேவதையை பிரார்த்தனை செய்ததால் தான் தேவர்களாலும் அழிக்க முடியாத ராவணேஸ்வரனை, அவரால் அழிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்புக்குரிய திதி தெரியாதவர்கள் பௌர்ணமி திதி அன்று அம்பிகையை முழுமனதோடு வழிபடுவதன் மூலம் அவர்களின் கர்ம வினைகள் குறையும்.
இதையும் படிக்கலாமே: பிறந்த தேதியவை வைத்து திதியை கண்டுபிடிக்கும் திதி கால்குலேட்டர்
இந்த காரணத்தினால் தான் முற்காலத்தில் மன்னர்கள் அவர்கள் பிறந்த திதிக்குரிய தெய்வத்திற்கு ஆலயங்களை கட்டி வழிபாடுகளை மேற்கொண்டனர் என்ற குறிப்பும் இருக்கிறது. இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த திதி வழிபாட்டை நாம் அனைவரும் தினமும் மேற்கொண்டு நம் வாழ்வில் நல்ல பல பயன்களை பெறலாம்.