குக்கரில் ஒரே 1 விசில் விட்டால் போதும். வெங்காயம் தக்காளி இல்லாமல் சூப்பர் வெஜ் குருமா 10 நிமிடத்தில் தயார்.

kuruma
- Advertisement -

வெங்காயம் தக்காளி வாங்குற விலைக்கு சொத்தையே எழுதி வைக்கணும் போல இருக்கு. இப்படிப்பட்ட காலகட்டத்தில் வெங்காயம் தக்காளி வாங்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த குருமா ரெசிபியை ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. வெங்காயம் தக்காளி சேர்க்காமல் குருமா சுவையாக இருக்குமா? என்ற எந்த சந்தேகமும் வேண்டாம். வாங்க இந்த சூப்பர் குருமா ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் – 2, தோல் உரித்த பூண்டு பல் – 10, சிறிய இஞ்சித் துண்டு – 1, முந்திரி பருப்பு – 10, தேங்காய் துருவல் – 1/4 கப், கசகசா – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வதக்கிய இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

coconut

அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 2, சோம்பு – ஒரு ஸ்பூன், நட்சத்திர சோம்பு – 1, இலவங்கம் – 3, கல்பாசி – சிறிய துண்டு, இந்த பொருட்களை சேர்த்து தாளித்து ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, உங்கள் விருப்பம் போல இன்னும் பச்சை பட்டாணி, நூல்கோல் போன்ற உங்களுக்கு பிடித்த எந்த காய்கறிகளை வேண்டுமென்றாலும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும். (காய்கறிகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அளவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

அதன் பின்பு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், தேவையான அளவு உப்பு, போட்டு ஒரு நிமிடம் வதக்கி குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து, மீண்டும் நன்றாக ஒருமுறை கலந்து விட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் ஒரே ஒரு விசில் வைத்தால் போதும். மணக்க மணக்க சூப்பர் குருமா தயார்.

kuruma1

இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் கொஞ்சம் தண்ணீராக இந்த குருமாவை வைத்துக்கொள்ளலாம். சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் தண்ணீரை குறைவாக ஊற்றி, தேங்காய் விழுதை கெட்டியாக ஊற்றி கொஞ்சம் கிரேவி பக்குவத்தில் இந்த குருமாவை தயார் செய்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா இன்னைக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -