உணவு வகைகளை பொறுத்த வரையில் வீட்டில் செய்வதை விட கடைகளில் வாங்கும் உணவை அனைவருமே விரும்பி தான் சாப்பிடுவார்கள். அதிலும் இந்த ரோட்டு கடைகளில் கிடைக்கும் சாம்பார் , சட்னி, குருமா போன்றவைகளை மிகவும் சிம்பிளாக செய்தாலும் சுவை அதிகமாக இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இது எல்லாருக்குமே தொட்டுக் கொள்ள ஏற்ற ஒரு சுவையான ரோட்டுக் கடை ஸ்டைல் தண்ணி குருமா எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் -2, தக்காளி -2, பச்சை மிளகாய் – 5, பூண்டு -10 பல், இஞ்சி -1 துண்டு, சோம்பு -1 ஸ்பூன், மிளகு -1/2 ஸ்பூன், தேங்காய் துருவியது – 1/4 கப், மட்டன் மசாலா -1/2 ஸ்பூன், மிளகாய் தூள் -1 ஸ்பூன், உப்பு -1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை -1 கொத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்க.
செய்முறை
இப்போது மிக்ஸி ஜாரில் ஒரு வெங்காயத்தை தோலுரித்து பெரிய துண்டுகளாக அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள் இத்துடன் பச்சை மிளகாய், தேங்காய், பூண்டு, இஞ்சி, அரை ஸ்பூன் சோம்பு, மிளகு என அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கொரகொரப்பாக அரைத்த பிறகு மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, இலவங்கம்,சோம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை, அனைத்தையும் சேர்த்து பிறகு மீதம் இருக்கும் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நிறம் மாறி வந்த பிறகு தக்காளியையும் பொடியாக நறுக்கி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்க வேண்டும்.
அதன் பிறகு மஞ்சள் தூள், மட்டன் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்த பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதையும் இதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பையும் சேர்த்த பிறகு ஒரு கொதி வந்த பின் மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்ட பிறகு கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.
சுவையான ரோட்டுக்கடை ஸ்டைல் தண்ணி குருமா தயார். இதை செய்வது மிக மிக சுலபம் அதிகபட்சம் 10 நிமிடத்திற்குள்ளாகவே இந்த குருமாவை செய்து விடலாம். ரொம்ப சுவையாக இருக்கும் இந்த குருமா இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், சப்பாத்தி என அனைத்து டிபன் வகைகளுக்குமே நன்றாக இருக்கும். இந்த குருமா ரெசிபியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.