காலையில் சுட்ட இட்லி மீதமானால் மாலையில் அது உப்புமாவாகவோ அல்லது வேறு ஒரு ஸ்நாக்ஸ் ஆகவோ மாறி விடும். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் நீந்துபோன இட்லியை வைத்து ஒரு அருமையான பக்கோடா செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இப்படி மட்டும் நீங்க பக்கோடா செஞ்சி கொடுத்தீங்கன்னா குழந்தைங்க தினமுமே இதை செஞ்சு கொடுக்க சொல்லி கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவை அட்டகாசமா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க. வாங்க இப்ப வந்து விழுந்த இட்லி பக்கோடா எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவுல தெரிஞ்சுக்கலாம்.
செய்முறை
இந்த பக்கோடா செய்ய மீந்த இட்லி 5 எடுத்துக் கொள்ளுங்கள். அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரே ஒருமுறை மட்டும் பல்ஸ் மோடில் விட்டு எடுத்தால் போதும். நல்ல உதிரி உதிரியாக வந்து விடும். இதை அப்படியே ஒரு பவுலில் மாற்றி கொள்ளுங்கள். ஒரு வேளை அப்போது தான் சுட்ட இட்லியில் செய்வதாக இருந்தால் இட்லி நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போடுங்கள் இல்லை என்றால் இட்லி உதிரி உதிரியாக வராமல் மாவு போல குழைந்து விடும்.
இப்போது அரைத்த இட்லியுடன் அரை ஸ்பூன் சோம்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து முதலில் நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு பச்சை மிளகாய் கீறி அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து மறுபடியும் ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.
இவையெல்லாம் சேர்த்த பிறகு கடைசியாக கால் கப் கடலை மாவையும் சேர்த்த பின்பு மீண்டும் கைகளால் நன்றாக கலந்து கொடுங்கள். இதில் தண்ணீர் கொஞ்சம் கூட ஊற்றக் கூடாது. வெங்காயம் இட்லியில் இருக்கும் தண்ணீரே இதற்கு போதும். கடைசியாக கொஞ்சம் முந்திரிப்பருப்பை உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள் சுவையை அட்டகாசமாக இருக்கும். இவை எல்லாம் சேர்த்த பிறகு ஒரு குழி கரண்டி சூடான எண்ணெயை இதில் ஊற்றி எண்ணெயும் சூடு ஆறிய பிறகு நன்றாக கலந்து விடுங்கள். பக்கோடா நல்லா கிரிஸ்ப்பியா இருக்கும். அவ்வளவு தாங்க பக்கோடாவிற்கான மாவு தயாராகி விட்டது.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து இந்த பக்கோடா பொறுத்தெடுக்க எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். தயார் செய்து வைத்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி எடுத்து பக்கோடா போடுவது போல எண்ணெயில் போட்டு நன்றாக சிவந்த பிறகு எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் முழுவதுமாக வடிந்த பிறகு பரிமாறலாம்.
இதையும் படிக்கலாமே: மீல் மேக்கரை வைத்து ஒருமுறை இப்படி குழம்பு வைத்துப் பாருங்கள். கறி குழம்பு சுவையையும் தோற்கடிக்க கூடிய சுவையில் இருக்கும்.
சுவையான இட்லி பக்கோடா தயார். இந்த ரெசிபி ரொம்பவே சுலபமாக செய்வதுடன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். எப்பொழுதும் கடைகளில் வாங்கி சாப்பிடும் பக்கோடாவை விட இது அதிகமான மொறுமொறுப்பு தன்மையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு தெரியும்.