40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி தோளில் தன் 7 வயது பிள்ளையை தூக்கிக்கொண்டு ஒரு பேருந்தில் ஏறினார். அவரோடு அவரின் உறவினர் ஒருவரும் இருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகம் என்பதால் அவர் சற்று குனிந்தவாறே தன் பிள்ளையை தோளில் சுமந்து நின்றுகொண்டிருந்தார். யாரிடமும் எதையும் பேசவில்லை. அவரை பார்ப்பதற்கு எதையோ பறிகொடுத்தவர் போல இருந்தார்.

கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்க, அவர் அதை தன் காதில் வாங்கிக்கொள்ளாமல் வேறேதோ சிந்தனையில் மூழ்கி இருந்தார். கண்டக்டர் சற்று அதட்டலாக டிக்கெட் கேட்டதும் தன் சட்டை பையில் இருந்து காசை எடுத்து கொடுத்து தான் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கூட கூற முடியாமல் வார்த்தைகளை மென்று முழுங்கினார்.
இவரின் செயல்கள் அனைத்தையும் அதே பேருந்தில் பயணித்த வேறொரு நபர் கவனித்துக்கொண்டு வந்தார். அவர் என்ன செய்கிறார், தன் உறவினரோடு ஏதாவது பேசுகிறாரா என அனைத்தையும் கவனித்தார். ஆனால் அந்த ஆசாமியோ சோகத்தின் உச்சத்தில் இருந்துகொண்டு தன் கண்களில் இருந்து தன்னை மீறி வழியும் நீரை அவ்வப்போது துடைத்துக்கொண்டே வந்தார்.

இவரின் செயல்கள் அனைத்தையும் கவனித்தவரின் ஊர் வந்துவிட்டது. இறங்கிலாமா இல்லை அந்த ஆசாமியை தொடந்து கவனிக்கலாம் என்று ஒரு நொடி எண்ணினார். பின் இறங்கலாம் என முடிவெடுத்து பேருந்தை விட்டு இறங்கினார். என்ன ஆச்சர்யம் அந்த ஆசாமியும் அதே ஊரில் இறங்கினார். இவருக்கு ஆர்வம் கூடியது. அந்த ஆசாமி எங்கு தான் போகிறார். இந்த ஊரில் அவருக்கு யார் உறவினர் என்று பார்த்துவிடுவோம் என்று எண்ணி அவரை பின் தொடர்கிறார்.

அந்த ஆசாமியோ வேக வேகமாக நடக்கிறார். அவர் பின் இவர் ஓட வேண்டியதாக இருந்தது. ஓர் இடத்தில் அவரின் நடை நின்றது. அங்கு அவரின் சொந்தங்கள் ஒரு 10, 15 பேர் கூடி இருந்தனர். தோளில் இருந்த தன் மகனை கீழே இறக்கிவிட்டார். அந்த சிறு பிள்ளையை அனைவரும் அணைத்துக்கொண்டு, “என்ன விட்டு போய்ட்டயே ராசா” என கதறி அழ தொடங்கினர். அந்த ஆசாமியோ, “உனக்கு பாட கட்டகூட காசில்லாத பாவி ஆய்ட்டேனே” என்று கதறுகிறார். அந்த ஆசாமி தன் இறந்த சிறுபிள்ளையை தோளில் சுமந்தபடியே வெளியூரில் இருந்து பேருந்து ஏறி தன் சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டிற்கு அடக்கம் செய்ய வந்துள்ளார் என்பதை உணர்ந்து மனமுடைந்து போனார் அவரை பின்தொடர்ந்தவர்.
இதையும் படிக்கலாமே:
ரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்
இந்த வேடிக்கை உலகில் ஒரு மனிதன் வாழும் போது மட்டுமல்ல அவன் இறந்த பிறகும் இறுதி சடங்கிற்கு பணம் தேவை படத்தான் செய்கிறது . என்று மாறும் இந்த கொடிய நிலை ?
குட்டி கதைகள், சிறு கதைகள் என அனைத்துவிதமான தமிழ் கதைகளையும் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள்.