நாளை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணருக்குப் பிடித்த பலகாரங்கள் அனைத்தையும் நிவேதனமாக வைத்து கிருஷ்ணரை வழிபாடு செய்வோம். அந்த வரிசையில் கிருஷ்ணருக்கு மிகவும் உகந்த பொருள் என்றால் அது அவல் பாயசம். தடபுடலாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட முடியாதவர்கள் கூட, வெறும் அவல் பாயசம் செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்தால், பரமாத்மாவின் அருளை முழுமையாகப் பெற முடியும். கிருஷ்ணருக்கு ரொம்பவும் பிடித்த அவல் பாயாசத்தை மணக்க மணக்க சுவையாக இனிப்பாக செய்வது எப்படி. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அவல் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள். கெட்டி அவல் – 1 கப், வெல்லம் – 1 கப், திக்கான பால் – 2 கப், ஏலக்காய்த் தூள் – 2 சிட்டிகை, முந்திரி பருப்பு – 10, உலர் திராட்சை – 10, நெய் தேவைக்கு ஏற்ப.
கடையிலிருந்து அவல் வாங்கும் போது கொஞ்சம் கெட்டி அவலாக பார்த்து வாங்கிக்கொள்ளவேண்டும். சிவப்பு அவல், லேசாக இருக்கும் அவலிலும் கூட இந்த பாயசத்தை செய்யலாம். கெட்டி அவலில் பாயாசம் செய்தால் மென்று சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். குழையாமலும் பாயாசம் வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, அந்த வெல்லத்தை நன்றாக கரைத்து, வெல்லம் இரண்டு கொதி வந்தவுடன் வடிகட்டி வெல்ல கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, எண்ணெயிலிருந்து வடித்தது எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

கடாயில் மீதமிருக்கும் நெய்யில் தயாராக எடுத்து வைத்திருக்கும் அவலைப் போட்டு 2 நிமிடங்கள் வறுத்து கொள்ள வேண்டும். அவல் வருபட்டவுடன் பாலை கடாயில் ஊற்றி, அவலுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். அவல், பாலுடன் நன்றாக வெந்து வர 5 நிமிடங்கள் எடுக்கும். (உங்களுக்கு தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பாலை கூட சேர்த்து ஊற்றி கொள்ளலாம்.)

பாலும் அவலும் ஒன்றாக வெந்து கெட்டிப் பதத்துக்கு தளதளவென வந்தவுடன், அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். வெல்லக் கரைசலை தயாராக எடுத்து வைத்திருக்கின்றோம் அல்லவா, அந்த வெல்ல கரைசலை இந்த பாயாசத்தில் ஊற்றி நன்றாகக் கலந்து விட வேண்டும். வெல்லக் கரைசல் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு, தயாராக இருக்கும் முந்திரி திராட்சையை இதன் மேல் தூவி 2 சிட்டிகை ஏலக்காய் பொடியைத் தூவிக் கலந்து பாருங்கள்.

அட்டகாசமான சுவையில் கிருஷ்ணருக்குப் பிடித்த நெய்வேதியம் தயாராகிவிட்டது. இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு, இந்த சிம்பிளான ரெசிபியை கிருஷ்ணருக்கு படைத்து சந்தோஷமாக இந்த கோகுலாஷ்டமியை உங்கள் வீட்டில் கொண்டாடுங்கள்.