ஒரு சில பொருட்களை எல்லாம் கோவிலில் இருந்து எடுத்துக் கொண்டு வரக்கூடாது என்று கூறுவதை கேட்டிருப்போம். அதில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் சிவன் கோவிலில் இருந்து எதையும் எடுத்துக் கொண்டு வரக்கூடாது என்று கூறுவார்கள். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்பதால் சிவனுடைய சொத்து போன்ற எந்த பொருட்களையும், வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்பார்கள். இப்படி ஒவ்வொரு கோவில்களிலும் ஒரு சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்று கூறப்படுவது உண்டு. அதில் முக்கியமானவை என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.
சிவன் சொத்து குலநாசம் என்பது சிவனுடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு சொல்லப்பட்ட ஒரு பழமொழி ஆகும். அதற்காக அங்கு கொடுக்கும் பிரசாதங்கள், விபூதி போன்றவற்றை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்று கூறுவது மிகவும் தவறானது ஆகும். தாராளமாக சிவன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம் மற்றும் விபூதி பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாம்.
சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதிக்கு மிஞ்சிய மருந்து இல்லை. தினமும் இந்த சிவன் கோவிலில் கொடுக்கப்பட்ட விபூதியை இட்டுக் கொண்டால் கெட்ட எண்ணங்கள் தோன்றாது, தவறான வழியில் செல்ல மாட்டார்கள். அதே போல பைரவர் கோவிலில் கொடுக்கப்படும் விசேஷமான விபூதியும் கூட, நல்ல ஒரு ஆற்றலை உடலுக்கு கொடுக்கும். நோய்கள் தீர்ந்து சுறுசுறுப்பு உண்டாகும்.
கோயிலில் கொடுக்கப்படும் விபூதி, குங்கும பிரசாதங்களும் கண்டிப்பாக வீட்டிற்கு கொஞ்சம் எடுத்து வந்து வைத்துக் கொள்வது நல்லது. கோவிலுக்கு ஏதோ ஒரு பரிகாரத்திற்கு வேண்டிக் கொண்டு வேண்டுதலை நிறைவேற்ற சில பொருள்களை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள் என்றால், அந்த பொருட்களை மீண்டும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. குறிப்பாக விளக்கு பிரார்த்தனை செய்கிறீர்கள் என்றால் விளக்கில் எண்ணெய் எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் வீட்டில் இருந்து கொண்டு செல்ல வேண்டும். அதிகப்படியான எண்ணெயை கொண்டு போய் பயன்படுத்திவிட்டு மீண்டும் அந்த எண்ணெயை மீதம் எடுத்து வரக்கூடாது.
கோவிலின் ஸ்தல விருட்சமாக இருக்கும் எந்த ஒரு விருட்சத்தில் இருந்தும் பக்க கிளைகளை ஒடித்து, சேதபடுத்தி வீட்டிற்கு எடுத்து வந்து நட்டு வைக்க கூடாது. இது குடும்பத்திற்கு தோஷத்தை ஏற்படுத்தும். கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஸ்தல விருட்சம் மிகப்பெரும் மூலிகை ஆகும். இதனை வீட்டிற்குள் கொண்டு வந்து நட்டு வைத்து வளர்ப்பது என்பது செய்யக்கூடாது. ஸ்தல விருட்சம் என்பது அந்தக் கோவிலில் மூலவருக்கு உரிய குழந்தை போன்றது. அதில் இருந்து ஒரு கிளையை உடைத்து எடுத்து வந்து நம் வீட்டில் வைப்பது பாவத்தை சேர்க்கும். எனவே தவறியும் இதை செய்து விடாதீர்கள். அப்படி உங்களுக்கு அந்த மரம் தேவை என்றால் அதிலிருந்து விழும் விதைகள் எடுத்து வந்து நட்டு வைத்து வளர்த்து கொள்ளலாம்.
கிளைகளை ஒடிப்பது, இலையை பறிப்பது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு பாவம் துரத்தும். கோவிலில் கொடுக்கப்படும் நைவேத்ய பிரசாதங்களை பக்தர்கள் எடுத்துக் கொண்டு வரலாம். ஆனால் பரிகாரத்திற்கு என்று நைவேத்திய பிரசாதத்தை தயாரித்து கோவிலுக்கு கொடுப்பவர்கள் அதிலிருந்து உங்களுக்கு என்று கொஞ்சம் எடுத்து வீட்டிற்கு வரக்கூடாது. அவர்களாகவே கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும். கடவுளுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வந்தால் அது அபசகுணம் ஆகும். அது போல நவகிரகங்களுக்கு படைக்கப்படும் பிரத்தியேகமான நைவேத்தியங்ககளையும் வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு வரலாம். சனீஸ்வரருக்கு கொடுக்கப்படும் எள் சாதத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சாப்பிடக் கூடாது.