ஆடி செவ்வாய் அன்று வீட்டில் இப்படி பூஜை செய்தால் கணவனின் ஆயுள் அதிகரிக்கும். பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்.

amman1
- Advertisement -

ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். ஒரே வரியில் சொல்ல போனால் உங்கள் வாழ்க்கையில், உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் அத்தனை தோஷங்களும், அத்தனை கஷ்டங்களும் விலகும். ஜாதக கட்டத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், இப்படி எந்த தோஷங்கள் இருந்தாலும் அந்த தோஷத்தினால் உண்டாகக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு இந்த பூஜை செய்து, அம்பாளை வழிபடுவது மிக மிக நல்லது. ஆடி செவ்வாய்க்கிழமை அம்பாளை நினைத்து வீட்டில் இருந்தபடியே சுலபமான முறையில் எப்படி பூஜை செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

kamatchi-amman8

வழக்கம் போல உங்கள் வீட்டையும் பூஜை அறையும் இன்று சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து மஞ்சள் பூசி தலை ஸ்னானம் செய்து விட்டு, பூஜை அறைக்கு சென்று அங்கு உள்ள தெய்வங்களின் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு தீபத்தை பூஜை அறையில் ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள். உங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய விரதத்தை நீங்கள்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். பால் பழம் சாப்பிட்டு விரதம் இருந்தாலும் சரி, சாப்பாடு சாப்பிட்டு விரதம் இருந்தாலும் சரி, எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்தாலும் சரி, சுத்தமான மனதோடு விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். காலையிலேயே விரதம் தொடங்கி விட்டது. நாள் முழுவதும் உங்களுடைய மனதில் ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த அம்மனின் நாமத்தை கூட மனதிற்குள் உச்சரித்துக் கொள்ளலாம்.

kungumam-kumkum

மாலை அம்மனுக்கு நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி இப்படி உங்களால் எது செய்ய முடியுமோ அதில் ஒன்று செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குறிப்பாக உங்களுடைய வீட்டின் காமாட்சியம்மன் தீபம் இருந்தால் அதை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும். அம்மனுக்கு நிவேதனம் படைத்து விடுங்கள். தீபத்திற்கு அருகில் ஒரு சிறிய வாழை இலை அல்லது வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள். அதில் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் 108 அம்மன் போற்றிகள் சொல்லி குங்கும அர்ச்சனை செய்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். முடியாதவர்கள் ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து இந்த குங்கும அர்ச்சனையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இறுதியாக அம்மனுக்கு தீப தூப கற்பூர ஆராதனை காட்டி மனதார உங்களுடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும். உங்களுடைய கணவர் குழந்தைகள் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். (அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து உங்களுடைய கணவரின் கையால், உங்களுடைய நெற்றியிலும் திருமங்கலத்திலும் இட்டுக்கொள்வது சிறப்பு.)

poojai

திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் திருமணம் நடக்க வேண்டும் என்று இந்த பூஜையை செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை பாக்கியத்தை வேண்டி இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அதன் பின்பு சாப்பிடாமல் இருப்பவர்கள் அம்மனின் பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

mangalyam

அதன் பின்பு குறிப்பாக நீங்கள் குங்கும அர்ச்சனை செய்த குங்குமத்தை சுமங்கலி பெண்களுக்கு நெற்றியில் இட்டுக்கொள்ள பிரசாதமாக கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு இந்த பூஜைக்கு சுமங்கலிப் பெண்களை அழைத்து கொடுத்தாலும் சரி தான். உங்கள் அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் பெண்களுடைய வீட்டிற்கு நீங்களே கொண்டு போய் இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள கொடுத்தாலும் சரி தான். தவறு ஏதும் கிடையாது.

அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தினை 11 பெண்களின் நெற்றியிலும் திருமாங்கல்யத்திலும் இட்டுக் கொள்வதற்காக உங்கள் கையாலேயே கொடுக்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி செய்யும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுடைய இல்லற வாழ்க்கை ஆயுசுக்கும் இனிமையாக அமையும். அந்த அம்மனின் அருள் ஆசியை பெற்று அனைவரும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -