ஒருவருக்கு வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் கொடுப்பவர் மகாலஷ்மி. செல்வங்களின் தேவதையாக இருக்கும் மகாலட்சுமி அழகு, அமைதி, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை ஆகியவற்றிற்கு ஆதாரமாகவும் இருக்கிறார். ஆகையால் அழகு, அன்பு, மகிழ்ச்சி, கருணை போன்ற குணங்கள் நிறைவாக கொண்ட பெண்களும் தெய்வ அம்சம் கொண்ட பெண்களாகவே கருதப்படுகிறார்கள். ஜோதிடத்தை பொறுத்தவரை உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியில் பிறந்திருப்போம். ஒரே ராசியில் பிறந்தவர்கள் ஒரே விதமான குணாதிசயங்களை கொண்டிருப்பது இயல்புதான். இருக்கும் பன்னிரெண்டு ராசிகளில், மானிடராய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சில நேரங்களில் தெய்வ அம்சம் பொருந்தியவர்களாக பார்க்கப்படுவதுண்டு. எனினும் இந்த 5 ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பெண்களுக்கே உரிய பல நற்குணங்களை கொண்டு தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். இந்த அதிர்ஷ்டம் பொருந்திய 5 ராசிகளை பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் அதிர்ஷ்டசாலிகள் தான். ராசியில் முதல் ராசியாக இருக்கும் மேஷ ராசி பெண்கள் பிறக்கும் பொழுதே அவர்களது தோற்றம் அழகுடன் தெய்வ அம்சம் பொருந்தியதாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் மகாலட்சுமியே பிறந்ததாக நினைத்து கொண்டாடுவார்கள். சாமுத்திரிகா லட்சணம் உடைய இவர்கள் மகாலட்சுமியின் அருள் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களை மணந்து கொள்ளும் ஆண் யோக சாலியாக இருக்க வேண்டுமென்றால் இவர்களை மதித்து நடந்தால் மட்டுமே போதும். அனைத்து யோகமும் அவரை வந்தடையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் உள்ள பெண்கள் எப்பொழுதும் தங்களை சுற்றி உள்ள அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் இரக்க குணமும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள். அறிவிலும், வீரத்திலும் சிறந்து விளங்கும் சிம்ம ராசிப் பெண்கள் கடவுளின் அருளைப் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களை சுற்றி உள்ளவர்கள் நல்ல எண்ணத்துடன் இருக்கின்றனர் என்றால் அவர்களுக்கு நல்லதே நடக்கும். அப்படி இல்லாமல் இவர்களை சுற்றி உள்ளவர்கள் இவர்களுடன் தீய எண்ணத்துடன் இருந்ததால் அவர்களுக்கு தீமையே விளையும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். நீதிக்கும் நியாயத்திற்கும் துணை நிற்கும் துலாம் ராசி பெண்கள் தங்கள் மனதில் ஆழமாக நினைக்கும் எந்த ஒரு விஷயமும் நிச்சயம் நடக்கும். இவர்கள் சொல்லும் வாக்கு பல சமயங்களில் அப்படியே பலிக்கும். அன்பும் நேசமும் கொண்ட இவர்களுக்கு தேவையானது உண்மையான பாசம் மட்டும் தான். காசு, பணத்தை எப்பொழுதுமே பெரியதாக நினைக்காதவர்கள் இவர்கள். இவர்களை மணந்து கொள்ளுபவர் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்றால் எப்பொழுதும் இவர்களிடம் இனிமையாக நடந்து கொண்டால் மட்டும் போதும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்த பெண்களின் வாக்கில் எப்போதுமே உண்மை இருக்கும். கொடுத்த வாக்கினை எப்படியாவது காப்பாற்றி விட முடிந்தவரை முயற்சிப்பார்கள். இவர்கள் பேசிய சில விஷயங்கள் அப்படியே பலிக்கும். தோற்றத்திலும் குணத்திலும் சிறந்தவர்களாக இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் எதையும் எப்போதும் எளிதில் நம்பிவிட மாட்டார்கள். புத்தி கூர்மை உடைய இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவர்கள். இவர்களை மணக்கும் கணவன் மார்கள். இவர்கள் சொல்வதை நம்பினால் மட்டும் போதும். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மீனம்:
மீன ராசி பெண்களுக்கு பிறந்தது முதலே தெய்வ கடாட்சம் பொருந்திய முக லட்சணம் இருக்கும். சிறு வயதில் இருந்து அவர்களைப் பார்க்கும் பலராலும் இதனை உணர முடியும். இவர்களிடம் முகராசி மட்டுமல்லாமல் கை ராசியும் உண்டு. இவர்கள் தொட்டுக் கொடுக்கும் எந்த ஒரு விஷயமும் நல்லதாகவே நடக்கும். இயற்கையிலேயே தெய்வ அம்சம் பொருந்திய இவர்கள் அனைவரிடமும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். எனக்கு எல்லோரும் வேண்டும் என்று அனைவரிடமும் இனிமையாக நடந்துகொள்ளும் தன்மை இவர்களிடம் இருக்கும்.
ராசியை மட்டுமே வைத்து ஒருவருடைய குணத்தை கணிப்பது என்பது சில நேரங்களில் சரியாக இருக்காது. அதற்கு காரணம் அவர்கள் பிறந்த நட்சத்திரம், லக்னம், கிரகங்களின் அமைப்பு இப்படி பல விஷயங்கள் அவர்களின் சில குணாதிசியங்களை மாற்றுகிறது. எனினும் அடிப்படையான சில விஷயங்கள் பெரும்பாலும் மாறுவது கிடையாது. அதை அடிப்படையாக கொண்டே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. எனினும் அவரவர் ஜாதக கட்டங்களை பொறுத்து இதில் சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத் தான் செய்யும்.