மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். நேரம் செலவாகும் என்ற ஒரே காரணத்தினால் கடைகளில் இருந்து வடை, பஜ்ஜி, போண்டா என்று வாங்கி வருவோம். இவ்வாறு செய்யாமல் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் டீ போடும் நேரத்தில் சுவையான வடையை செய்தால் எப்படி இருக்கும்? ஆம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மாவே அழைக்காமல் சுவையான வடையை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
வடை யாருக்கு தான் பிடிக்காது? ஆனால் அந்த வடையை நாம் செய்வதற்கு உளுந்தம் பருப்பை ஊறவைத்து, அதை பக்குவமாக அரைத்து, சுட்டு எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அவ்வாறு கஷ்டப்படாமல் மிகவும் எளிமையான முறையில் அவலை வைத்து உளுந்த வடை போல் அவல் வடை செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
அவல் – ஒரு கப்பு
அரிசி மாவு – 4 ஸ்பூன்
ரவை – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
கருவேப்பிலை – 2 இனுக்கு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
முதலில் அவலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அதை கழுவ வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் கழுவிய அவலை போட்டு அவல் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அவல் நன்றாக ஊறிய பிறகு தண்ணீர் சுத்தமாக இல்லாத வண்ணம் அவலை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அரிசி மாவை சேர்க்க வேண்டும். ரவையையும் சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். வடை மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது நீரை தெளித்து பிணைந்து கொள்ளலாம்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை நம் கையில் எடுத்து உருட்டும் பொழுது அவை நன்றாக உருட்ட வர வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் வடையை பொறிக்கும் அளவிற்கு எண்ணெயை ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக சூடானதும் மிதமான தீயையும் விட சிறிது குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கையில் தண்ணீரை தொட்டுக்கொண்டு மாவை வடை போல தட்டி எண்ணெயில் போட வேண்டும். அரை நிமிடம் கழித்து கரண்டியை வைத்து லேசாக வடையை திருப்பிப் போட வேண்டும். இரண்டு புறமும் நன்றாக சிவக்க விட்டு வடை வெந்ததும், எண்ணையை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான வடை தயாராகிவிட்டது.
ஒரு அடுப்பில் டீ போடுவதற்கு பாலை ஊற்றி வைத்துவிட்டு மற்றொரு புறம் நாம் இந்த வடையை தயார் செய்ய ஆரம்பித்தோம் என்றால் டீ போடுவதற்கும் வடை சுடுவதற்கும் சரியாக இருக்கும். மாலை நேரத்தில் டீயுடன் இந்த வடையை சேர்த்து சாப்பிட்டு மகிழ்வோம்.