இப்போது காய்கறிகள் விற்கும் விலைக்கு காய்கறிகளே இல்லாமல் ஏதாவது குழம்பு வைத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று யோசிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த தக்காளி போடாமல் குழம்பு வைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும் அப்படின்னு யோசிக்கிறவர்களுக்காகவே, இந்த அழகான சமையல் குறிப்பு. கருவாப்பிலை பருப்பு குழம்பு செய்வது எப்படி. இந்த குழம்பை வைத்தால் சுட சுட சாதம் ஒரு குண்டான் இருந்தாலும் அது பத்தவே பத்தாதுங்க. எல்லாரும் சீக்கிரம் வயிறு ரொம்ப ரொம்ப முட்ட முட்ட சாப்பிடுவாங்க.
செய்முறை
இதற்கு முதலில் 50 கிராம் அளவு பருப்பை குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு, விசில் போட்டு வேகவைத்து மசித்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, புளி கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி புளி கரைசல் எடுக்கவும்.
அடுத்து இந்த குழம்புக்கு ஒரு மசாலா அரைக்க வேண்டும். ஒரு வானலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வர மிளகாய் 3, மிளகு 1 ஸ்பூன், உளுந்து 1 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் 4, இஞ்சி 1 இன்ச் தோல் சீவியது, சின்ன வெங்காயம் 15 பல், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். இறுதியாக 4 கொத்து கருவேப்பிலைகளை உருவி போட்டு வறுக்க வேண்டும்.
தேவையென்றால் 5 லிருந்து 6 கொத்து கருவாப்பிலை கூட சேர்க்கலாம். கருவாப்பிலை லேசாக வதங்கி வாசம் வந்ததும், தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன், சேர்த்து எல்லா பொருட்களையும் கலந்து விட்டு அடுப்பை அணைத்து இதை ஆறியவுடன், மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது குழம்பை தாளித்து விடலாம். அடுப்பில் 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஊற்றி கடுகு 1 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் 5 பல், போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு, கருவேப்பிலை 1 கொத்து போட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்த பேஸ்ட்டை ஊற்றி நன்றாக வதக்குங்கள். இரண்டு நிமிடம் அந்த விழுதை எண்ணெயிலேயே வதங்கும்போது எண்ணெய் பிரிந்து வரும்.
அப்போது கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, மீண்டும் கொதிக்க விடுங்கள். புளியின் பச்சை வாடை போக குழம்பு மிதமான தீயில் 5 லிருந்து 7 நிமிடம் கொதிக்கட்டும். இறுதியாக இதில் நாம் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் பருப்பை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். குழம்பு ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. ஓரளவுக்கு திக்காக இருக்கட்டும். குழம்பு பச்சை வாடை நீங்கி கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, சுடச்சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே சுவை புரியும். ஆரோக்கியம் நிறைந்த இந்த குழம்பு ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.