“கலைமகள், அலைமகள், மலைமகள்” எனும் முப்பெரும் தேவியர்களில் “கலைமகள்’ எனப்படும் சரஸ்வதி தேவியை நவராத்திரி காலத்தில் வழிபடக்கூடிய தினம் “சரஸ்வதி பூஜை தினம்” அல்லது “ஆயுத பூஜை தினம்” என அழைக்கப்படுகின்றது. கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு அனைத்து வகையான நன்மைகளையும் கொடுக்க வல்லது. அப்படிப்பட்ட கல்வி ஆற்றல் சிறக்க அருள்புரியும் தெய்வமாக சரஸ்வதி தேவி திகழ்கிறாள். அந்த சரஸ்வதி தேவியை எப்படி நாம் வழிபட்டால், அவளின் பரிபூரணமான அருட்கடாட்சத்தை பெறலாம் என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆயுத பூஜை செய்வதற்கு தேவையான பொருட்கள்
சரஸ்வதி தேவியின் சிறிய அளவு சிலை அல்லது படம் | 1 |
சிறிய அளவு மரப் பீடம் | 1 |
வெள்ளைநிற வஸ்திரம் | 1 |
வெள்ளை நிற தாமரை மலர் | 1 |
மல்லிகை பூக்கள் | சிறிதளவு |
மாவிலைகள் | சிறிதளவு |
மஞ்சள் | சிறிதளவு |
குங்குமம் | சிறிதளவு |
பச்சரிசி | சிறிதளவு |
தேங்காய் | 1 |
வெற்றிலைகள் | 9 |
பாக்குகள் | 9 |
வாழைப்பழம் | 9 |
இதர பழங்கள் | வகைக்கு 2 |
கிழியாத பச்சை வாழை இலை | 1 |
நெய் | சிறிதளவு |
எண்ணெய் | சிறிதளவு |
சாம்பிராணி | தேவையான அளவு |
கற்பூரம் | தேவையான அளவு |
ஊதுபத்தி | தேவையான அளவு |
வேர்க்கடலை, உடைத்த கடலை, வெல்லம் சேர்த்து கலக்கப்பட்ட அரிசிப்பொரி | சிறிதளவு |
சரஸ்வதி பூஜை தினத்திற்கு முன் தினமே, உங்கள் வீட்டு பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக், கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சரஸ்வதி பூஜை தினத்தன்று, அறைக்கு முன்பாக தரையில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். வீட்டின் தலைவாயிற் படியிலும், பூஜை அறையின் வாயிற்படியின் நடுவிலும் கொஞ்சம் மாவிலைகளை சொருகி வைக்க வேண்டும். மர பீடத்திற்கு நடுவிலும், ஓரத்திலும் மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.
பிறகு அந்த மர பீடத்தை உங்கள் வீட்டின் பூஜை அறையில் கிழக்கு திசையை பார்த்தவாறு தரையில் வைத்து, அந்தப் பீடத்தின் மீது தூய்மையான வெள்ளை நிற வஸ்திரம் ஒன்றை விரித்து போட்டு, அதன் மீது நீங்கள் வைத்திருக்கின்ற சரஸ்வதி தேவியின் சிறிய அளவு விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைக்கவேண்டும்.
தேவியின் விக்கிரகம் அல்லது படத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு இட வேண்டும். மேலும் தேவியின் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பாக, ஒரு வெள்ளை நிற தாமரைப் பூவை வைக்க வேண்டும். சரஸ்வதி தேவியின் சிலைக்கு வாசம் மிகுந்த மல்லிகை பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிவிக்க வேண்டும்.
மர பீடத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியின் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பாக உங்கள் வீட்டில் கல்வி பயிலும் குழந்தைகளின் புத்தகங்களை ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து, அதன் மீது சிறிதளவு உதிரி மல்லி பூக்களை போட்டு வைக்க வேண்டும்.
தாம்பாளத் தட்டுக்கு சற்று முன்பாக, ஒரு பச்சை வாழை இலையை விரித்து அதில் உடைக்கப்பட்ட தேங்காய், பச்சரிசி, வெல்லம், கடலை பருப்பு கலந்த அரிசி பொரி, 9 வெற்றிலைகள், 9 பாக்குகள், 9 வாழைப்பழங்கள் மற்றும் இதர பழங்களை நைவேத்தியம் படைக்க வேண்டும்.
பிறகு 2 மண் அல்லது செம்பு, பித்தளை அகல் விளக்கில் நெய் அல்லது எண்ணையை ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். பின்பு சாம்பிராணி மற்றும் ஊதுபத்தியை கொளுத்தி தூப புகை இடவேண்டும்.
இப்போது மிகுந்த மன ஒருமைப்பாட்டுடன் சரஸ்வதி தேவி விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பாக அமர்ந்து, “சகலகலாவல்லி மாலை’ அல்லது சரஸ்வதி தேவிக்குரிய ஏதாவது மந்திரம் அல்லது ஸ்தோத்திரத்தை துதித்து சரஸ்வதி தேவியை வழிபட்ட பிறகு, தூபக்காலில் கற்பூரத்தை கொளுத்தி, சரஸ்வதி தேவிக்கு ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
பூஜையில் நைவேத்தியமாக வைக்கப்பட்ட 9 வெற்றிலை, பாக்குகள் மற்றும் பழங்களை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற பருவமடையாத 9 சிறுமிகளுக்கு பிரசாதமாக கொடுத்துவிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ஆயுத பூஜை அன்று கூறவேண்டிய மந்திரம்
மேற்சொன்ன முறையில் சரஸ்வதி பூஜை தினத்தன்று சரஸ்வதியை வழிபடுவதால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவியின் அருட்கடாட்சம் கிடைத்து, அவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவார்கள். எதிர்மறை சிந்தனைகள், எண்ணங்கள் நம்மை நெருங்காது. வீட்டில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.