காரசாரமான குடைமிளகாய் சட்னி செய்முறை

capsicum chutney
- Advertisement -

இட்லி தோசை என்றாலே அதற்கு சைடிஷாக நாம் முதலில் தேர்வு செய்வதே சட்னி தான். ஏனெனில் அதை செய்ய அதிக நேரம் எடுக்காது என்ற காரணத்தினால் தான். ஆனால் அப்படி நாம் செய்யும் சட்னி பெரும்பாலும் தேங்காய் சட்னி, உடைத்த கடலை, வேர்க்கடலை சட்னி போன்றவையாக தான் இருக்கும். இதை தவிர்த்து குடைமிளகாய் வைத்தும் இதே போல எளிமையாக அதே நேரத்தில் அட்டகாசமான சுவையில் ஒரு சட்னி தயார் செய்யலாம்.

குடைமிளகாயில் சட்னியா என்று பலரும் யோசிக்கலாம். குடைமிளகாய் வைத்து செய்யப்படும் இந்த சட்னி மிகவும் பிரமாதமாக இருப்பதுடன் அது குடைமிளகாயில் செய்த சட்னி தான் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அட்டகாசமான இந்த சட்னியை எப்படி செய்வது என்று சமையல் குறிப்பு பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • குடைமிளகாய் – 2
  • வரமிளகாய் – 5
  • கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1ஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – 1/4 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை

முதலில் குடைமிளகாயை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள விதைகளை எல்லாம் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல வெங்காயத்தையும் மீடியம் சைஸில் நறுக்கி விடுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானதும் அதில் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு கடலை பருப்பு, வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இது தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு குடைமிளகாயும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கி பிறகு தேங்காய் துருவல் கொச்சமல்லி கருவேப்பிலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

கடாய் சூட்டிலே தேங்காய் கொத்தமல்லி கருவேப்பிலை அனைத்தும் வதங்கி விடும். இவையெல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். இத்துடன் புளி, உப்பையும் சேர்த்த பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னியை மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான கொண்டை கடலை லட்டு

அரைத்த இந்த சட்னியை பௌலில் ஊற்றி தாளிப்பு கரண்டியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து பொரித்த பிறகு தாளிப்பை சட்னியில் ஊற்றி விடுங்கள் சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.

- Advertisement -