இந்த நட்சத்திரத்தில் இந்த கடவுளை வணங்கினால் அதிர்ஷ்டம் வருமாம்? நட்சத்திரம் பார்த்து தெய்வ வழிபாடு செய்வது எப்படி?

astro-cash1
- Advertisement -

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததாக இருக்கும். அந்த நட்சத்திரம் வரும் நாட்களில் அந்த கடவுளை வழிபடும் பொழுது அதற்குரிய பலன்களும் நமக்கு அதீதமாக கிடைக்கப் பெறும். இது போன்ற சிறுசிறு வழிபாட்டு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திருந்தால் நிறைய நன்மைகளை பெறலாம். எந்த நட்சத்திரத்தில்! எந்த கடவுளை எப்படி வழிபட வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒவ்வொரு நாளும் உங்கள் வீட்டு காலண்டரில் இன்றைய நட்சத்திரம் என்ன? என்பது பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நட்சத்திரம் வரும் நாளில் இந்த தெய்வங்களை வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறது ஜோதிடம். அதில் பூச நட்சத்திரம் வரும் பொழுது உலகளந்த பெருமாளை வழிபட வேண்டும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வந்தால் தீராத பிணியும் விரைவாக தீரும். அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ காரியங்களைச் செய்யவும் இந்த நட்சத்திரம் உகந்ததாக இருக்கும்.

- Advertisement -

பெரிய மனிதர்களின் சந்திப்பின் பொழுது அல்லது உயர் அதிகாரிகளை சந்திக்க செல்லும் காரியம் ஜெயம் ஆக வேண்டுமென்றால் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் செல்வது சிறப்பு. அஸ்வினி நட்சத்திரம் காரிய வெற்றிக்கு சிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. புதிய வாகனம் வாங்க நினைப்பவர்கள் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளன்று ஈசனை வழிபடுவது சிறப்பு. நிலம், வீடு, ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கும் மிருகசீரிடம் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

அஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில் திருமண விஷயங்களை ஆரம்பிப்பதும், பேச்சுவார்த்தைகள் நடத்துவது, பெண் பார்க்க செல்வது போன்ற விஷயங்களை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். மனதிற்குப் பிடித்தவர்களை மணந்து கொள்ள சற்றும் யோசனை இன்றி அம்பாளை வணங்கி விட்டு அஸ்தம் நட்சத்திர நாளில் செல்லுங்கள் வெற்றி நிச்சயம் உண்டாகும். இந்த நட்சத்திர நாளில் தான் பாமாவை மணக்க ஸ்ரீ கிருஷ்ணர் அம்பாளை வணங்கி விட்டு சென்றாராம்.

- Advertisement -

ஈசனுக்கு அர்ச்சனை செய்து விட்டு அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவதும், தளவாட பொருட்கள், இயந்திரங்களை வாங்குவது ஆகியன சிறப்பான பலன்கள் கிடைக்க செய்யும். உங்கள் தொழில் மென்மேலும் வளர கூடிய வாய்ப்புகள் அமையும்.

நிலம், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் பொழுதும், வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டாலும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளை வழிபட்டு விட்டு செல்லலாம். இந்த நட்சத்திரம் வரும் நாளில் இந்த விஷயங்களை செய்யும் பொழுது நிச்சயம் வெற்றி கிடைக்கும். அவிட்ட நட்சத்திரம் வரும் நாளில் முருக வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். எமபயம் உள்ளவர்கள், விபத்து குறித்த பயம் உள்ளவர்கள் முருகனை வழிபட்டு விட்டு அவிட்ட நட்சத்திரத்தில் வெளியில் சென்றால் எவ்வித விபத்துகளும் நேராது. அதையும் மீறி விபத்துக்கு உள்ளானாளும் காயமே இல்லாமல் தப்பிக்கலாம்.

நீங்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும், அதைப்பற்றிய படிப்பை படித்து வந்தாலும் ஸ்ரீ ரங்கநாதரை தொடர்ந்து வழிபாடு செய்து வர கைராசிக்காரர் என்கிற பெயரை வாங்கலாம். அதே போல தேர்வுகளில் ஜெயிக்கவும், அறிவில் சிறந்தவர்களாக இருக்கவும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாள் வழிபாடு செய்வது, அர்ச்சனை செய்வது போன்றவை நல்ல பலனைக் கொடுக்கும். செல்லும் காரியம் ஜெயமாக, தொட்டதெல்லாம் துலங்க, காரிய வெற்றியாக, நினைத்தது நடக்க, வேண்டியது பலிக்க மூல நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபட்டு வர வேண்டும். இப்படி செய்து விட்டால் விநாயகரின் அருள் பெற்று எதையும் நம் வசமாக மாற்றிவிடலாம்.

- Advertisement -