சட்டுனு பத்து நிமிஷத்துல கடலை மாவு போண்டா மொறுமொறு எப்படி செய்வது? அந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

kadalai-maavu-onion-bonda
- Advertisement -

மாலை நேரத்தில் டீயுடன் பஜ்ஜி, போண்டா சுட்டு சாப்பிடுவது அவ்வளவு அருமையான ஒரு சுகத்தைக் கொடுக்கும். பஜ்ஜி போட முடியாதவர்கள், இது போல சட்டுனு வெங்காயத்தை நறுக்கி கடலை மாவுடன் கலந்து எளிதாக போண்டாக்களை சுவையாக செய்து அசத்தலாம். போண்டா மொறுமொறுவென்று ஹோட்டலில் செய்வது போல வருவதற்கு ஒரு ரகசியக் குறிப்பு உண்டு! அது என்ன? என்பதையும், மொறுமொறுவென்று சூப்பர் கடலை மாவு போண்டா எப்படி செய்வது? என்பதையும் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

கடலை மாவு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 300 கிராம், பெரிய வெங்காயம் – 3, ஆப்ப சோடா – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

கடலை மாவு போண்டா செய்முறை விளக்கம்:
கடலை மாவு போண்டா செய்வதற்கு முதலில் 300 கிராம் அளவிற்கு கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு ஆப்ப சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்த பின்பு நீங்கள் பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நறுக்கிய இந்த எல்லா பொருட்களையும் ஒன்றுடன் ஒன்று கலந்து வருமாறு கடலை மாவுடன் சேர்க்க வேண்டும். கடலை மாவு போண்டா மொறுமொறுவென்று ரொம்பவே சுவையாக வருவதற்கு ஒரு ரகசியமுண்டு. கடைகளில் பெரும்பாலும் இதனை பின்பற்றி தான் மொறுமொறு போண்டாக்கள் செய்வது வழக்கம். ஒரு குழி கரண்டி அளவிற்கு எண்ணெய் சூடேற்றி கொள்ளுங்கள். சூடான எண்ணெயை இதனுடன் கலந்து பிசைந்தால் போண்டா சுடுவதற்கு மொறுமொறுவென்று சூப்பராக வரும்.

- Advertisement -

எண்ணெய் கலந்த பின்பு தேவையான அளவிற்கு தண்ணீரை தெளித்து தெளித்து போண்டா மாவு பிசையுங்கள். கெட்டியான போண்டா மாவு பதத்துக்கு மாவு பிசைந்ததும், நீங்கள் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வட சட்டியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு கொதித்ததும் அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்க நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.

சிறு சிறு உருண்டைகளாக இல்லாமல், பெரிதாக போட்டால் மேலே மொறுமொறுவென்றும் உள்ளே சரியாக வேகாமல் இருக்கலாம் எனவே சிறு சிறு போண்டாக்களாக போட்டு எடுப்பது நல்ல ருசி கொடுக்கும். ரொம்பவே சுவையாக சட்டுனு பத்து நிமிடத்தில் கூட செய்து விடக் கூடிய இந்த கடலை மாவு போண்டா மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் இதே முறையில் உங்களுடைய வீட்டில் அனைவருக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள்.

- Advertisement -