ரிஷபம்: (கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதம், மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதம்.)
ரிஷப ராசிக்கு குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் வந்தாலும் ஆட்சிபெற்று இருப்பதால் சிரமத்துடன் சிறப்பான பலனையும் அளிப்பார். வீண் விரயங்களும், தொலைதூர பயணங்களும் இருந்தாலும் அதற்கேற்றார்போல் வருமானம் இருக்கும். சுய அறிவுடன் சில முக்கிய முடிவுகளை நீங்களே எடுப்பீர்கள்.
உங்களின் வீண் பிடிவாதத்தையும், பலவீனத்தையும் சற்று மாற்றிக் கொள்வது நன்மை தரும். முடிந்துபோன பிரச்சினைகளுக்கு புதிய முறையில் தீர்வு காண்பீர்கள். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை நிலவ சற்று விட்டுக் கொடுத்தல் நல்லது. வேலை பளுவின் காரணமாக தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். பகைவர்களால் நன்மை உண்டாகும்.
உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை வரம் கிடைக்கும். தாயாருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அவரை கனமாக பார்த்துக்கொள்வது அவசியம். பிள்ளைகளின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளுங்கள். ஒன்றை விற்று மற்றொன்று வாங்குவீர்கள். திருத்தலச் சுற்றுலாவிற்கு சென்று வருவீர்கள்.
தொழில்:
தொழிலை பொறுத்தவரை சற்று ஏற்றத்தாழ்வு இருக்கவே செய்யும். உங்களை விட அனுபவம் குறைந்தவர்களிடம் கூட சில நேரங்களில் நீங்கள் பணிந்து செல்ல வேண்டிய ஒரு சூழல் ஏற்படும். மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ளாமல், அவர்களின் சொற்படி நடந்துகொள்வது நல்லது. தேவை இல்லாமல் அடுத்தவர்களின் வேலையில் தலையிட்டால் அது உங்களையே பாதிக்கும். அதனால் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பதே உங்களுக்கு நல்லது. சிலருக்கு பணி மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
வியாபாரிகளை பொறுத்தவரை கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. அதே போல கொடுத்த கடனை கோபப்படாமல் பேசி வசூலிப்பது நல்லது. இரும்பு சம்மந்தமான தொழில் செய்பவர்கள், ஓட்டல் நடத்துவபவர்களுக்கெல்லாம் நல்லதொரு லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.
கல்வி:
மாணவர்களை பொறுத்தவரை சற்று சுறுசுறுப்போடு கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். கடைசியாக பார்த்துக்கொள்வோம் என்று இருக்காமல் ஆரம்பத்தில் இருந்தே கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேவை இல்லாமல் பிறரின் வம்புக்கு செல்வது கூடாது. மீறி சென்றால் நஷ்டம் உங்களுக்கே.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தை பொறுத்த வரை ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். யாரையும் நம்பி தொழில் தொடங்க வேண்டாம். எதிலும் முதலீடு செய்வதற்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் ஒருமுறைக்கு இருமுறை கலந்தாலோசிப்பது நல்லது. சிலருக்கு எவ்வளவு தான் பண வரவு இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல செலவும் இருக்கும்.
ஜாக்கிரதையாக இருக்க வேண்டியவை:
பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. அதே போல வழக்கு விடயங்களில் கவனம் தேவை. வியாபாரிகள் மற்றொரு புதிய தொழிலை தொடங்காமல் இருப்பது நல்லது. அதே போல பணிக்கு செல்வோர் வேலையை விடுத்து தொழில் துவங்குவதை தவிர்க்க வேண்டும். பிறருக்கு தேவை இல்லாமல் கடன் கொடுத்து விட்டு பிறகு தவிக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விடயத்தில் மிக மிக கவனம் தேவை.
பரிகாரம்:
விழுப்புரம், கடலூர் மற்றும் பூவரசன்குப்பம் ஆகிய ஊர்களில் கோவில் கொண்டிருக்கும் நரசிம்மரை வழிபடுவதால் நல்ல பலன் உண்டாகும். திருச்செந்தூருக்கு ஒருமுறை சென்று முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. பிரதோஷ நாளில் சிவனை வழிபடுவது நல்லது. அதே போல உங்களால் முயன்றவரை ஏழைகளுக்கு உதவுங்கள்.