நம் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்களாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அது நம் விதிப்படிதான் நடக்கும். நம் விதி எனப்படுவது நம் ஜனன காலத்தை வைத்து எழுதிய ஜாதகத்தில் அடங்கியுள்ளது. இந்த ஜாதகத்தில் சிலருக்கு தோஷங்கள் இருப்பதன் மூலம் தங்களது வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிலும் இந்த கால சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷங்கள் இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. நம்மை படாதபாடு படுத்தி எடுக்கத்தான் செய்யும். ஆனால் இதிலிருந்து விடுபடுவதற்கான வழியினை நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டுத் தான் சென்றுள்ளார்கள். கால சர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் உள்ளவர்களுக்கு இந்த பதிவானது நல்ல பலனை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை தொடங்கலாம்.
நாக தோஷங்களில் சக்தி வாய்ந்ததாக கூறப்படுவது இந்த காலசர்ப்பதோஷம் தான். இந்த தோஷத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு எளிமையான பரிகாரம் உண்டு. ஒரு ஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையே எல்லா கிரகங்களும் சிக்கிக்கொண்டால் அது கால சர்ப்ப தோஷமாக கூறப்படுகிறது. லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது, மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு, எட்டில் கேது இப்படி இருந்தால் இது சர்ப்ப தோஷமாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட ஜாதகத்தை கொண்டவர்களுக்கு திருமண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், திருமணம் முடிந்தாலும் மனைவியிடையே ஏற்படும் பிரச்சினைகள், சிலருக்கு எந்தக் காரியத்தை எடுத்தாலும் அது வெற்றியை நோக்கிச் செல்வது போல இருக்கும், ஆனால் தோல்வியில் முடியும். இப்படிப்பட்ட ஜாதகக்காரர்கள், இரண்டு பாம்புகள் பின்னி இருக்கும் சிலையை நாகபஞ்சமி தினத்தன்று, கோவிலில் பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது பாரம்பரியமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆனால் இதனை எல்லோராலும் நடைமுறை வாழ்க்கையில் செய்வது என்பது கொஞ்சம் கடினம் தான்.
இதற்கு மற்றொரு சுலபமான பரிகாரம் ஒன்றும் உள்ளது. இதற்கான சுலபமான பரிகாரத்தினை பாம்பன் சுவாமிகள் அவர்கள் நமக்காக எழுதி வைத்துள்ளார். அதுதான் ‘துவிதநாகபந்தம்’. ‘துவிதம்’ என்றால் இரண்டு என்ற அர்த்தத்தை குறிக்கின்றது. இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டிருக்கும் தோற்றமே துவிதநாக பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சர்ப்பதோஷம் உள்ளவர்கள் முதலில் கடைபிடிக்க வேண்டிய விஷயம் அசைவ உணவை தவிர்ப்பதுதான். அசைவ உணவைத் தவிர்த்து விட்டு இந்த துவிதநாக பந்தம் வழிபாட்டினை கடைபிடிக்க வேண்டும். இந்த துவித நாகபந்தம் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் கட்டாயம் அசைவ உணவு சாப்பிடக்கூடாது.
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், பாம்பு தொல்லைகள் உள்ளவர்கள், மாலை சுற்றிப் பிறந்த தோஷம் உள்ளவர்கள், குழந்தை பிறப்பதில் ஏற்படும் துன்பம் இவை எல்லாமும் இந்த மந்திரத்தால் சரிசெய்யப்படும்.
அஸ்வினி, மகம், மூலம், இந்த நட்சத்திரங்கள் உள்ள நாளில் நீங்கள் இந்த வழிபாட்டினை துவங்கலாம். திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த நட்சத்திரங்கள் வரும் நாளிலும் இந்த வழிபாட்டினை துவங்கலாம். நட்சத்திரங்கள் எல்லாம் பார்க்க முடியாது என்று நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கும் முதல் நாள், செவ்வாய்க்கிழமை அன்று ஒரு முருகன் கோவிலுக்குச் சென்று இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து விட்டு, பின்பு தினம்தோறும் உங்கள் வீட்டிலேயே அந்த இறைவனின் முன்பு இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்து வந்தால் போதும். உங்களுக்கான துவிதநாக பந்த மந்திரம் இதோ..
சேயா சேயாதே தேயா சேயாசே
மாயா மாயாவா வாயா மாயாமா
வாயா மாவாயா மாயா சேமாசே
யோயா நேயாவோ யாயே தேயாளே.
கால சர்ப்ப தோஷமாக இருந்தாலும், ராகு கேது தோஷமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை, அந்த இறைவனை நினைத்து உச்சரிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இறுதிவரை விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் போராடுவதன் மூலம் எந்தத் தடையையும் தகர்த்து விடலாம் என்பதை மட்டும் நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே
குரு ஸ்ரீராகவேந்திரரின் ஸ்தோத்திரம்
இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Rahu ketu mantra in Tamil. Kala sarpa dosha mantra. Rahu ketu mathiram benefits. Kala sarpa dosham mantra palangal.