குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க விநாயகப் பெருமானை இப்படி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

achu vella deepam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக திகழ்வதற்கு அவர்களுக்கு வாரிசு என்ற ஒன்று இருக்க வேண்டும். அப்படி வாழ்க்கையை முழுமை பெற செய்யும் வாரிசுகள் அவர்களுடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தால் தான் பெற்றோருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி அவர்கள் வாழ்வதற்கு கல்வி என்பது இன்றியமையாததாக திகழ்கிறது. கல்வியில் சிறந்து விளங்கினால் அவர்களை தேடி வேலை வாய்ப்புகளும், செல்வ செழிப்புகளும் வந்துவிடும் என்பதால் தான் இந்த காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கல்வியை எந்த அளவுக்கு சிறப்பாக தர முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக தருகிறார்கள். இருப்பினும் சில குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகள் விநாயகருக்கு எந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு குழந்தை படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அந்த குழந்தைக்கு நவகிரகங்களின் அருள் கண்டிப்பாக தேவை. அதிலும் குறிப்பாக புதன் பகவானின் அருள் பரிபூரணமாக தேவை. புதன் பகவானே புத்திகாரகன் என்று கூறப்படுகிறது. புதன் பகவானை பொருத்தவரை அவர் எந்த கிரகத்தோடு சேர்கிறாரோ அதற்கேற்றார் போல் புத்தியை மாற்றி விடுவார்.

- Advertisement -

நல்லவர்களோடு சேர்ந்தால் நல்ல புத்தி வரும். தீயவர்களோடு சேர்ந்தால் தீய புத்தி வரும் என்று நம் முன்னோர்கள் கூறுவது உண்டு. அது புதன் கிரகத்திற்கு உரிய பழமொழி ஆகும். நவக்கிரகங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட விநாயகப் பெருமான் நினைத்தால் எப்பேர்ப்பட்ட குழந்தையாக இருந்தாலும் அந்த குழந்தைக்கு கல்வி செல்வத்தை சிறப்பாக அருளச் செய்ய முடியும்.

இந்த வழிபாட்டை குழந்தைகள் மேற்கொள்வது மிகவும் சிறப்பு மிகுந்தது. மேலும் இந்த வழிபாட்டை செவ்வாய் அல்லது புதன்கிழமையில் செய்ய வேண்டும். குறிப்பாக இதிலும் மிகவும் சிறப்பானது புதன்கிழமை. ஏனென்றால் புதன் பகவான் புத்திகாரகன் என்பதால் புதன்கிழமை விநாயகரை குழந்தைகள் வழிப்பட வேண்டும். பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வெற்றிலை அல்லது அரச இலை அல்லது மாவிலை அல்லது வாழை இலை என்று ஏதாவது ஒரு இலையை சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குழந்தைகள் தங்கள் கைகளால் குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

- Advertisement -

குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் அவர் கல்வியை சிறப்பாக விளங்கச் செய்வார். இப்பொழுது குங்கும பிள்ளையாருக்கு அருகம்புல்லையும், வாசனை மிகுந்த மலர்களையும் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக இரண்டு அச்சு வெல்லத்தை வைக்க வேண்டும். பூஜை பொருட்கள் விற்கும் கடையில் பூவத்தி என்று திரி விற்கப்படும். இந்த திரி மேலே மெல்லியதாகவும் கீழே கனமானதாகவும் பஞ்சில் செய்யப்பட்டு இருக்கும். இந்த திரியை வாங்கி வந்து முதல் நாள் இரவே நெய்யில் ஊற வைக்க வேண்டும்.

அச்சு வெல்லத்தின் மேலே சிறிது பள்ளமாக இருக்கும். அந்தப் பள்ளத்தில் நாம் ஊற வைத்திருக்கும் பஞ்சுத்திரியை அதில் வைத்து குழந்தைகளை தீபம் ஏற்ற சொல்ல வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு விநாயகருக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக குழந்தைகள் கையால் வைக்க சொல்ல வேண்டும். பிறகு குழந்தைகளுக்கு தெரிந்த ஏதாவது ஒரு விநாயகர் மந்திரத்தை கூறலாம்

- Advertisement -

குழந்தைகளால் எவ்வளவு முறை முடியுமோ அவ்வளவு முறை கூறி பூக்களாலோ அல்லது அருகம்புல்லாலோ விநாயகருக்கு அர்ச்சனை செய்ய சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் 7 முறையும் அதிகபட்சம் 51 முறையும் அர்ச்சனை செய்யலாம். பிறகு குழந்தைகள் கையால் கற்பூர தீப ஆராதனை காட்டி வழிபட்டு விட்டு விநாயகருக்கு குழந்தைகளை தோப்புக்கரணம் போட சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற ஆஞ்சநேயருக்கு ஒரு ரூபாயை வைத்து வழிபட்டு செய்து பாருங்கள்

இவ்வாறு தொடர்ந்து 16 வாரங்கள் இந்த வழிபாட்டை குழந்தைகள் மேற்கொண்டால் அவர்களின் கல்வியில் எப்பேர்பட்ட தடைகள் இருந்தாலும் அந்த தடைகளை விநாயகப் பெருமான் விலக்கி நவகிரகங்களின் அருளையும் வழங்கி குழந்தைகளை கல்வியில் சிறந்து விளங்கச் செய்வார்.

- Advertisement -