நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அதேபோல் நாம் அழகாக இருக்க வேண்டும் என்றால் அந்த ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்வதற்கு உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதாவது இயற்கையிலேயே கிடைக்கக் கூடிய பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது என்றும் அழகாக இருப்போம். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் மசாலா பொருளான கசகசாவை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகளை பெற முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
சமையலறையில் அஞ்சறைப்பெட்டி இருக்கும். அதில் கண்டிப்பான முறையில் கசகசாவும் இருக்கும். கசகசாவை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் பல வகைகளில் மேம்படும் என்றாலும் அதே கசகசாவை நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது சிறப்பான பலனை பெற முடியும்.
கரும்புள்ளிகள் நீங்க:
முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்குவதற்கு முதல் நாள் இரவே கசகசாவை பசும்பாலில் ஊறவைத்து கொள்ள வேண்டும். குறைந்தது 8 மணி நேரமாவது கசகசா பாலில் ஊற வேண்டும். இதை மைய அரைத்து அதை அப்படியே முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்கும்.
பருக்கள் நீங்க:
முகத்தில் இருக்கக்கூடிய பருக்களும், பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் நீங்குவதற்கு பாலில் கசகசாவை ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விருதை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சம் பழ சாறை சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து விட்டு அதை முகத்தில் இருக்கக்கூடிய பருக்களின் மீது தடவி வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகப்பரு பிரச்சனை முற்றிலுமாக நீங்கும். பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் மறைய ஆரம்பிக்கும்.
இளமை தோற்றத்தை பெற:
பாலில் ஊற வைத்த கசகசாவை அரைத்து அந்த விழுதில் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி சாறு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும்.
வடுக்கள் நீங்க:
முகத்தில் இருக்கக்கூடிய அம்மை வடுக்கள் நீங்குவதற்கு ஒரு ஸ்பூன் அளவு கசகசா, ஒரு சிறிய துண்டு விரலி மஞ்சள், பத்து கருவேப்பிலை இலை இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து மைய அரைத்து அம்மை வடுக்கள் இருக்கும் இடங்களில் தடவி வர வடுக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: சுருக்கம் மறைந்து இளமை தோற்றம் பெற உதவும் க்ரீம்
நம் உடல் ஆரோக்கியம் எப்படி சமையல் அறையில் ஒளிந்து இருக்கிறதோ அதேபோல் நம்முடைய அழகின் ரகசியமும் சமையலறையில் தான் மறைந்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட்டு என்றும் இளமையாக இருப்போம்.