தெய்வங்களை நாம் வீட்டில் வழிபடுவதை விட ஆலயங்களுக்கு சென்று வழிபடும் பொழுது அதற்குரிய பலன் நமக்கு அதிகமாகவே கிடைக்கும். அதனால்தான் ஆலய வழிபாட்டை மேற்கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் ஆலயத்திற்கு சென்று நாம் வழிபடும் பொழுது மன ஒருமைப்பாடு ஏற்படும். ஆலயத்தில் இருக்கக்கூடிய அதிர்வலைகளால் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஆலயத்திற்கு சென்று வழிபடும் பொழுது முழு பலனையும் பெறுவதற்கு எந்த முறையில் வலம் வர வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. ஆகம விதிப்படி கட்டிய அனைத்து ஆலயங்களுக்கும் தனி சிறப்புகள் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நாம் ஆலய வழிபாட்டை மேற்கொள்வோம். இப்படி நாம் வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அதற்குரிய பலனை நாம் முழுமையாக பெற வேண்டும் என்று நினைப்பவர்களும், வழிபாட்டை மேற்கொண்டும் எந்தவித பலனும் இல்லை என்று நினைப்பவர்களும் இந்த முறையில் ஆலயத்தை வலம் வர வேண்டும்.
பொதுவாக நாம் ஆலயத்திற்கு சென்று வழிபடும் பொழுது ஆலயத்தை மூன்று முறை வலம் வருவோம். ஒரு சிலர் ஐந்து முறை என்றும் நவகிரகங்களை வழிபடும் பொழுது 9 முறை என்றும் சிலர் 11 முறை என்று அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆலயத்தை வலம் வருவார்கள். இப்படி நாம் வலம் வரும் பொழுது நம்முடைய வழிபாட்டின் முழுமையான பலனை நாம் பெற வேண்டும் என்றால் அதில் ஒரு சூட்சுமமான வழி இருக்கிறது. அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
பொதுவாக ஆலய வழிபாட்டை மேற்கொள்கிறோம் என்றால் எந்த கிழமையில் மேற்கொள்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். நம்முடைய பிறந்த நட்சத்திரத்திற்கு உகந்த கிழமையாக பார்த்து தான் நாம் ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அன்றைய தினம் வரும் நட்சத்திரத்தை பொருத்து ஆலயத்தை நாம் வலம் வந்தோம் என்றால் நம்முடைய வேண்டுதல்கள் கண்டிப்பான முறையில் நிறைவேறும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் என்ற முறையில் 9 கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கு ஏற்றவாறு நாம் ஆலயத்தை வலம் வர வேண்டும். அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திர நாளில் ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆலயத்தை ஏழு முறை வலம் வர வேண்டும். பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாளில் சென்று வழிபடும் பொழுது 20 முறை வலம் வரவேண்டும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திர நாளில் வழிபடும் பொழுது ஆறு முறை வலம் வரவேண்டும். ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திர நாளில் வழிபட்டால் பத்து முறை வலம் வரவேண்டும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திர நாளில் வழிபட்டால் ஏழுமுறை வலம் வர வேண்டும். திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திர நாளில் வழிபட்டால் 18 முறை வலம் வர வேண்டும்.
புனர்பூசம், விசாகம், புரட்டாதி போன்ற நட்சத்திர நாளில் வழிபட்டால் 16 முறை வலம் பெற வேண்டும். பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திர நாளில் வழிபட்டால் 19 முறை வலம் வர வேண்டும். ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திர நாளில் வழிபடும் பொழுது 17 முறை வலம் வரவேண்டும்.
இதையும் படிக்கலாமே: நவகிரகங்களின் அருளைப் பெற உதவும் ருத்ராட்சம்
இந்த சூட்சுமமான விஷயத்தை நாம் கருத்தில் கொண்டு எந்த நட்சத்திரம் நாளில் ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் அந்த நட்சத்திர நாளுக்கு ஏற்ப எத்தனை முறை வலம் வர வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு வலம் வந்தால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.