நவநிதிகளுக்கு அதிபதியாக விளங்குபவர் குபேரன்! செல்வாதிபதியாக இருக்கக் கூடிய இந்த குபேரனை வியாழன் கிழமைகளில் வழிபட்டு வருபவர்களுக்கு செல்வ வளமானது குறைவில்லாமல் சேரும் என்பது நம்பிக்கை. மேலும் குபேரன் பற்றிய அறியாத ரகசியங்கள் மற்றும் குபேரனை எப்படி வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி குவியும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
குபேரன் நம்மை எதிர்க்க வரும் பகைவர்களை ஒன்றும் இல்லாமல் செய்யக் கூடியவர்! இதை உணர்த்தவே அவருடைய மடியில் கீரிப்பிள்ளை ஒன்றை வைத்திருப்பார். விஷ ஜந்துக்களை ஒழித்துக் கட்டக் கூடிய இந்த கீரிப்பிள்ளை போலவே, குபேரனை வழிபடுபவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை, பகைவர்களை ஒழித்து கட்டி மேலும் மேலும் செல்வத்தை நமக்கு அள்ளிக் கொடுப்பவர், வாழ்க்கையில் உயர்நிலைக்கு கொண்டு செல்பவர், திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியவர் ஆவார்.
நவகிரகங்களில் புதன் பகவான் புத்தியை கொடுக்கக் கூடியவர். இவருடைய அதிபகவானாக விளங்க கூடியவர் குபேரனாக இருக்கின்றார். புத்தியை தீட்டி, வாழ்க்கையில் முன்னேற்றத்தை தந்து, செல்வந்தராக செய்யக் கூடிய அறிவினை கொடுக்கக் கூடியவர் குபேரன். இவருக்கு மெல்லிய இழைகளை போன்ற அவல் என்றால் மிகுந்த விருப்பமாம். சம்பா அரிசியில் செய்யப்பட்ட மெல்லிய அவல் கொண்டு நைவேத்தியம் படைத்து குபேர பகவானை வியாழன் கிழமையில் குபேர தீபம் ஏற்றி வழிபட்டு வருபவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வமும், வெற்றி மேல் வெற்றியும் குவியும் என்பது நம்பிக்கை.
இல்லற வாழ்க்கையில் செல்வங்கள் குவியவும், தன வரவு பெருகவும், தொழில் விருத்தி உண்டாகவும், வியாபாரம் செழித்து ஓங்கி வளரவும், பணம் மென்மேலும் சேரவும், நவநிகளும் உயர்ந்து செல்வந்தராக இருக்கவும் குபேர அருள் தேவை. இவருடைய அருள் இருந்தால் குப்பையில் இருப்பவரும் கோபுரத்திற்கு ஏறலாம். கோபுரத்தில் இருப்பவரும் குப்பையில் வந்து விழலாம்.
இவர் திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியவர். எனவே இவரை வழிபட்டு வரக்கூடிய அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்வதும் சற்று சிரமமான காரியம் தான். லாட்டரியில் பணம் விழுவது போலவே இவருடைய அதிர்ஷ்டமும் நமக்கு திடீரென நம்மை அறியாமல் வந்து சேரும். அப்படி வரக் கூடிய அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்வது சிரமம், வந்த வழியே சென்று விடும் அபாயமும் உண்டு. எனவே குபேர அருள் பெற்றவர்கள், திடீர் அதிர்ஷ்டத்தை கொண்டவர்கள் அதை தக்க வைத்துக் கொள்ள அன்னதானம் செய்வதும், ஏழை குழந்தைகளுக்கு கல்வி தானம் செய்வதும் வேண்டும்.
அது மட்டும் அல்லாமல் இயலாதவர்களுக்கு திருமண உதவிகள் செய்வதும், திருமணங்களை நடத்தி வைப்பதும், மரம் நடுவது, பொது காரியங்களில் ஈடுபடுவது போன்ற தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தால் வந்த அதிர்ஷ்டம் அப்படியே நிலைக்கும். இவை அடுத்தடுத்த சந்ததியினருக்கும் தொடரும். அப்படி அல்லாமல் சுயநலத்தோடு இருந்தால் எப்படி நமக்கே தெரியாமல் வந்ததோ, அதே போல அதிர்ஷ்டம் மாயமாய் மறைந்து போகும். எனவே குபேர அருள் வேண்டும் என்றால் அவரை முழு மனதோடு இந்த வகையில் பிரார்த்தித்து பயன் பெறுங்கள். மற்றும் எல்லோருக்கும் உதவி செய்து கடவுளின் அருளை முழுமையாக தக்க வைத்துக் கொள்ளுங்கள்.