ரோட்டுக்கடை மசாலா பூரி வீட்டிலேயே அதே சுவையில் செய்வது எப்படி?

poori
- Advertisement -

ரோட்டுக்கடை சுவையில் இனி வீட்டிலேயே மசாலா பூரி :
என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்யும் உணவுப்பொருட்களை விட வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் மிகவும் பிடித்திருக்கும். அதுவும் இந்த ரோட்டுக் கடையில் கிடைக்கும் மசாலாப் பூரியின் சுவை மிகவும் அருமையாகத்தான் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த மசாலா பூரியை ரோட்டு கடையின் சுவையிலேயே வீட்டில் எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

poori

பூரி செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – முக்கால் கப், மைதா மாவு – கால் கப், ஜவ்வரிசி மாவு – 11/2 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பூரி செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, ஜவ்வரிசி மாவு இவை மூன்றையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவின் மீது ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தடவி 20 நிமிடங்கள் நன்றாக ஊற விடவேண்டும். பின்னர் ஊறிய மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி ஒரு வாட்டர் பாட்டில் மூடி அல்லது சிறிய கிண்ணம் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சிறிய வட்ட வடிவ துண்டுகளாக மாற்றி எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும் இப்பொழுது பூரி தயாராகிவிடும்.

poori

மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
பட்டாணி – கால் கிலோ, உருளைக்கிழங்கு – கால் கிலோ, 4 துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், நறுக்கிய தக்காளி – கால் கப், இஞ்சி – சிறிய துண்டு. பூண்டு –10 பல், புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி –ஒரு கைப்பிடி, சோம்பு – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், கறி மசாலா – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

மசாலா செய்முறை:
குக்கரில் தோல் நீக்கிய உருளைக்கிழங்கு மற்றும் இரண்டு மணி நேரம் ஊற வைத்த பட்டாணி இவற்றை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியில் இருந்து தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அதிலிருந்து அரை கப் அளவு பட்டாணியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்

mash

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு புதினா, கொத்தமல்லி, சோம்பு இவற்றிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு, ஸ்டார்பூ போன்ற கறி மசாலாக்களை செர்த்து தாளித்து பின்னர் அதனுடன் அரைத்த விழுதினை சேர்த்து வதக்க வேண்டும்.

இவை சற்று வதங்கிய பின் இதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், கறி மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் பட்டாணி வேகவைத்த தண்ணீரையும் சேர்த்து அதோடு 2 டம்ளர் தண்ணீரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை நன்றாக கொதித்தவுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும்.

poori

பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் பூரிகளை நன்கு உடைத்து போட்டு, அதன் மீது எடுத்து வைத்துள்ள பட்டாணியை சிறிதளவு போட்டு, அதற்குமேல் மசாலாவை ஊற்றி, அதன்மீது பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு சேர்த்து, அதற்குமேல் கார்ன் சிப்ஸ் அல்லது ஓமப் பொடி சேர்த்து பரிமாறி கொடுத்தோம் என்றால் இதன் சுவைக்கு உங்களுக்கு கிடைக்கும் பாராட்டே தனிதான். இனி கடையில் வாங்காமல் உங்கள் வீட்டிலேயே மசாலா பூரியை சுவைத்து மகிழலாம்.

- Advertisement -