2 முருங்கைக்காய் இருக்கா உங்க வீட்ல. உடனடியாக இந்த ‘முருங்கைக்காய் மசாலா கறி’ செஞ்சு பாருங்க. நாக்கில் எச்சி ஊறும் ரெசிபி இது!

murungai-masala
- Advertisement -

முருங்கைக்காய் என்றாலே சாதாரணமாக சாம்பார், குழம்பு இவைகள்தான் வைத்து சாப்பிடுவோம். கொஞ்சம் வித்தியாசமான முறையில் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் முருங்கைக்காய் மசாலா கறி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மசாலா கறி ரசம் சாதம், தயிர்சாதம், சாம்பார்சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் சுடச்சுட சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். வாங்க அந்த சூப்பர் ரெசிபி தெரிஞ்சுக்கலாம்.

murungai-masala2

முதலில் 2 முருங்கை காய்களை எடுத்து துண்டு துண்டுகளாக வெட்டி ஒரு கடாயில் போட்டு, அந்த முருங்கை காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து ஒரு மூடி போட்டு முக்கால் பாகம் வேக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கால் பாகம் வெந்த இந்த முருங்கைக்காய் தண்ணீரோடு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக முருங்கைக்காய் மசாலா கறி செய்வதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பின் மீது வையுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, மிக மிக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 15 பல், மிக மிக பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 5, சேர்த்து முதலில் நன்றாக வதக்க வேண்டும். (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய சைஸ் பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

murungai-masala1

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், மீடியம் சைஸ் பழுத்த தக்காளி 2 – மிக மிக பொடியாக நறுக்கியது சேர்த்து, தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக வெங்காயம் தக்காளியுடன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன், மல்லித் தூள் – 1 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்த்து இந்த மசாலாவை நன்றாக கலந்துவிட்டு, முருங்கைக் காயை வேக வைத்திருக்கும் தண்ணீரில் இருந்து 2 குழிக்கரண்டி அளவு தண்ணீரை எடுத்து, கடாயில் இருக்கும் மசாலாவில் ஊற்றி, மசாலா பொருட்களை 2 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். (மசாலாவில் உப்பு சேர்க்கும்போது ஜாக்கிரதை. முருங்கைக்காயை வேக வைக்கும் போது உப்பு சேர்த்து இருக்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

கடாயில் இருக்கும் வெங்காயம் தக்காளி, மசாலா பொடியின் பச்சை வாடை நீங்கியதும், முக்கால் பாகம் வேக வைத்திருக்கும் முருங்கைக்காயை தண்ணீருடன் எடுத்து இந்த கடாயில் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு மசாலா அனைத்தும் முருங்கைக்காயில் ஊறும்படி வேகவிட வேண்டும்.

murungai-masala3

மசாலாவுடன் முருங்கைக்காய் சேர்ந்து வெந்து அதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி, தொக்கு பதத்திற்கு, எண்ணெய் பிரிந்து வரும் போதே கமகமவென வாசம் வீசும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறுங்கள். அட்டகாசமான முருங்கைக்காய் மசாலா கறி தயார்.

murungai-masala4

இந்த ரெசிபியை செஞ்சு வச்சா  யாருமே வேணான்னு சொல்ல மாட்டார்கள். விருப்பமா சாப்பிடுவாங்க. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -