வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai
- Advertisement -

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் – ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்

- Advertisement -
Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் – தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, – தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை

- Advertisement -

நாலு வகுப்பும்இங் கொன்றே; – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி

ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே – மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;

- Advertisement -
Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

ஏவல்கள் செய்பவர் மக்கள்! – இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ?
மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல
வீடு நடத்துதல் கண்டோ ம்

சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் – அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; – தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் – நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் – எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், – நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்

யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, – அவை
பேருக் கொருநிற மாகும்

சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் – அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் – இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

நிகரென்று கொட்டு முரசே! – இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே – பொய்ம்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்

அன்பென்று கொட்டு முரசே! – அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவுமே போகும் – வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்

அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்
அத்தனைப் பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

உடன்பிறந் தார்களைப் போலே – இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் – இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

மரத்தினை நட்டவன் தண்ணீர் – நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம், – இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! – இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! – பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்

உடன்பிறந் தவர்களைப் போலே – இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை – இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?

வலிமை யுடையது தெய்வம், – நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை – தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ?

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

தம்பி சற்றே மெலிவானால் – அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி – மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

அன்பென்று கொட்டு முரசே! – அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் – கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்

அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

பாருக்குள்ளே சமத்தன்மை – தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது – புவி
யெங்கும் விடுதலை செய்யும்

Mahakavi Bharathiyar
Mahakavi Bharathiyar

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்

இதையும் படிக்கலாமே:
சங்கு – பாரதியார் கவிதை

இது போன்ற மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bharathiyar Kavithai – “Vetri ettu thikkum lyrics in Tamil“. In this poem, Bharathiyar is saying few things to band drums.

- Advertisement -