எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் நாம் விநாயகர் பெருமானை தான் வழிபட வேண்டும். அதனால் தான் அவரை முழு முதற்கடவுள் என்று கூறுகிறோம். எவ்வளவு வசதி படைத்த ஆளாக இருந்தாலும் சரி ஏழ்மையில் தவிக்கும் நபராக இருந்தாலும் சரி எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு விநாயகர் பெருமானை வழிபட அந்த காரியம் வெற்றி அடையும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட விநாயகரை எந்த முறையில் நாம் வழிபட்டால் நம்முடைய வருமானம் அதிகரிக்கும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு கடவுளை நாம் வழிபட்டாலும் அந்த கடவுளின் அருள் மட்டுமே நமக்கு கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தெய்வங்களின் அருள் மட்டும் அல்லாமல் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் நமக்கு பலன்களை தரக்கூடிய நவகிரகங்களையும் வணங்குவதற்கு சமமாகவே கருதப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்கி நிம்மதியான வாழ்க்கையை அருளக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகப் பெருமான். இவரை நினைத்த காரியம் நடக்க, குழந்தைகள் நன்றாக படிக்க, விரைவில் திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, செல்வ வளம் அதிகரிக்க என்று பலவகையான வேண்டுதலுக்காக நாம் வணங்கலாம். இந்த பதிவில் பணவரவை அதிகரிக்கும் வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
பணவரவை அதிகரிக்க கூடிய வழிபாட்டை செய்ய வேண்டிய நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி மற்றும் சுக்கிரனுக்கு உரிய கிழமையாக திகழ்வதால் அன்றைய தினம் நாம் விநாயகர் பெருமானை வழிபட வேண்டும். கண்டிப்பான முறையில் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடி விநாயகரை தேர்வு செய்து வழிபட வேண்டும். விநாயகர் இல்லை ஆனால் அரச மரம் மட்டும் இருக்கிறது என்றால் அதை கூட நாம் வழிபடலாம். அரசமரம் இல்லாத விநாயகரை இந்த பணவரவு வழிபாட்டிற்கு பயன்படுத்துவது அதிகளவு பயனை தராது.
சரி வெள்ளிக்கிழமை அன்று காலையில் வீட்டில் எப்பொழுது போல் பூஜைகளை முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடிக்கு சுக்கிர ஹோரையில் செல்ல வேண்டும். வீட்டிலிருந்து ஒரு பெரிய பாட்டிலில் தண்ணீரை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இந்த தண்ணீரை விநாயகப் பெருமானுக்கு ஊற்றி அபிஷேகம் செய்துவிட்டு அவருக்கு அருகம்புல், பூக்களை வைக்க வேண்டும். பிறகு வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை அவருக்கு முன்பாக வைத்து புதிதாக வாங்கிய 11 அகல் விளக்குகளுக்கு வீட்டிலேயே மஞ்சள் குங்குமம் வைத்து எடுத்துச் சென்று விநாயகப் பெருமானுக்கு முன்பாக வரிசையாக வைத்து விடுங்கள்.
அனைத்து விளக்குகளிலும் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தயாராக வைத்துக் கொள்ளுங்கள். விநாயகப் பெருமானை மனதார வழிபாடு செய்துவிட்டு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து ஒருமுறை அரச மரத்தை சுற்றிவர வேண்டும். இரண்டாவது தீபத்தை ஏற்றி வைத்து இரண்டாவது முறை சுற்றிவர வேண்டும். இப்படி 11 விளக்குகளிலும் தீபத்தை ஏற்றி வைத்து 11 முறை சுற்றிவர வேண்டும்.
பிறகு விநாயகப் பெருமானை மனதார வழிபட்டு விட்டு வீடு திரும்ப வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் 11 தீபங்களை ஏற்றி வைத்து 11 முறை விநாயகர் பெருமானை சுற்றிவர அனைத்து தெய்வங்கள் மற்றும் கிரகங்களின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். விநாயகர் இல்லாத அரச மரமாக இருந்தால் அந்த அரச மரத்தடியில் விநாயகரை மஞ்சளில் பிடித்து வைத்து மேற் சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வழிபட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: லட்சாதிபதி யோகம் தரும் பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். செல்வ செழிப்பு மேலோங்கும்.