இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட எப்பொழுதும் செய்யும் சட்னி செய்யாமல் இந்த பீர்க்கங்காய் கடையலை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவைக்கு இன்னும் இரண்டு தோசை வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

peerkangai
- Advertisement -

இப்பொழுது இருப்பவர்கள் அனைவரும் அவசர அவசரமாக சமையல் வேலையை முடித்து விட்டு கிச்சனில் இருந்து வெளிவர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக உண்ணும் வகையில் சமைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதில்லை. ஆனால் சமைக்கின்ற உணவை மிகவும் விருப்பத்துடனும், வீட்டில் உள்ளவர்களின் சுவைக்கு ஏற்றவாறும் சமைத்துக் கொடுத்தால் கொஞ்சம் சாப்பிடுபவர்கள் கூட தங்கள் வயிறு நிறைய நன்றாக சாப்பிடுவார்கள்.

அவ்வாறு இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய சட்னியை மட்டுமே அடிக்கடி செய்து கொடுக்கின்றனர். இதனை தவிர்த்து சற்று வித்தியாசமான சைடிஷ்களை செய்து கொடுத்தால் இரண்டு தோசைக்கு பதிலாக நான்கு தோசை சாப்பிடுவார்கள். அப்படி சற்று வித்தியாசமானதும், சுவையானதுமான பீர்க்கங்காய் கடையலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 5, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 3, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:
முதலில் கால் கிலோ பீர்க்கங்காயை தோல் சீவி தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரில் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் பூண்டு, பச்சைமிளகாய் இதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு, அடுப்பின் மீது வைத்து, குக்கரை மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரில் பிரஷர் வர ஆரம்பித்ததும் குக்கர் விசில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியை திறந்து பருப்பு கடையும் மத்து வைத்து அனைத்தையும் நன்றாகக் கடைந்துவிட வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பீர்க்கங்காய் கடையலில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி கலந்து விட வேண்டும்.

- Advertisement -