பொதுவாகவே அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்படி தோன்றும் போது கடையில் சென்று எதையும் வாங்காமல் மிகவும் எளிமையாக நம் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டியை தயார் செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இதற்கு முதலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு அதில் அரை ஸ்பூன் உப்பை சேர்க்க வேண்டும். பிறகு மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பிணையும் பதத்திற்கு பிசைய வேண்டும். பிறகு அதை 30 நிமிடம் மூடி வைத்து விட வேண்டும்.
இப்பொழுது இரண்டு உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்றாக பிசைந்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, சிறிதளவு கொத்தமல்லி, கரம் மசாலா 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக சப்பாத்தி மாவை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெலிதாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் ஓரங்களை எல்லாம் நறுக்கி எடுத்து விட வேண்டும். இப்போது சப்பாத்தி வட்டமாக இல்லாமல் கட்டமாக இருக்கும். இந்த சப்பாத்தியின் நடுவில் கத்தி வைத்து நறுக்கி இதை இரண்டு நீள துண்டுகளாக எடுத்து கொள்ள வேண்டும். இதே போல் அனைத்து சப்பாத்திகளையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து திரட்டி வைத்து இருக்கும் சப்பாத்தியில் வைத்து அப்படியே உருட்டி கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் மைதாவை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளுங்கள். சப்பாத்தி மாவை உருட்டி முடிக்கும் போது அது பிரிந்து வந்து விடாமல் இருக்க, இந்த மைதா மாவை கொஞ்சமாக எடுத்து பேஸ்ட் போல குழைத்து ஒட்டி விடுங்கள். இதே போல் அதன் ஓரங்களிலும் தடவி அழுத்தி விட வேண்டும். இப்பொழுது இதை பார்ப்பதற்கு ஒரு வெஜ் ரோல் போலவே இருக்கும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் ரோலை எண்ணெயில் போட்டு நன்றாக சிவக்கும் வரை பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் மிகவும் எளிமையான சுவையான மாலை நேர சிற்றுண்டி தயாராகி விட்டது.