தேங்காய் சேர்க்காமல் பொட்டுக்கடலை சட்னி இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! டேஸ்ட் செமையா இருக்கும்.

pottu-kadalai-chutney2
- Advertisement -

தினமும் ஒரே சட்னி செய்து போர் அடித்து போன உங்களுக்கு இந்த சட்னி வித்தியாசமான சுவை தரக்கூடிய வகையில் அமைந்து இருக்கும். ரொம்ப ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் சட்டென அரைத்து தாளித்துக் கொட்டி கலந்து விட்டால் பொட்டுக்கடலை சட்னி அற்புதமான சுவையில் தயாராகிவிடும். தேங்காய் எதுவும் சேர்க்காமல், தக்காளி கூட சேர்க்காமல் செய்யும் இந்த சட்னி அலாதியான சுவையில் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அற்புதமாக இருக்கும். நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வது? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

pottu-kadalai0

பொட்டுக்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, வர மிளகாய் – 4, புளி – சிறு நெல்லி அளவு, பொட்டுக் கடலை – கால் கப், உப்பு – தேவையான அளவு, வெல்லம் – ஒரு துண்டு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

பொட்டுக்கடலை சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு முறை மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வெங்காயத்தை மட்டும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இன்னொரு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஜாரில் 3 வர மிளகாய்களை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் பொருட்கள் தாளிக்க தேவைப்படும். பின்னர் கால் கப் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

pottu-kadalai-chutney

இந்த சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு துண்டு வெல்லம் சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். வெல்லம் இல்லை என்றால் கால் டீஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக சட்னியை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விட வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும், பெருங்காய தூள், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் ஒன்றைக் கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

pottu-kadalai-chutney1

வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் பச்சை வாசம் போக கலந்து விட வேண்டும். பொட்டுக்கடலை சேர்த்து உள்ளதால் அதிகம் நீங்கள் அடுப்பில் வைத்திருந்தால் சுவை மாறி விடும் எனவே லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். பத்தே நிமிடத்தில் அசத்தலான சுவையில் வித்தியாசமான முறையில் பொட்டுக்கடலை சட்னி தயாராகிவிட்டது. இதே முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -