ராகு கேது பெயர்ச்சி 2023-2025 பரிகாரங்கள்

ragu1
- Advertisement -

நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும் இந்த ராகு பகவானும், கேது பகவானும் நேற்று பெயர்ச்சியாகி உள்ளார்கள். இந்த பெயர்ச்சி சில பேருடைய வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது. சில பேருடைய வாழ்க்கையில் சில சங்கடங்களை தரப் போகின்றது. இந்த ராகு கேது பெயர்ச்சியானது உங்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட பலனை கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை பக்குவமாக நடத்திச் செல்ல வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக நீங்கள் எந்த கடவுளை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது. 12 ராசிக்காரர்களும் அடுத்த ஒன்றரை வருடம் செய்ய வேண்டிய வழிபாடு என்னென்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் பெரிய பாரத்தை தலையில் இருந்து இறக்கி வைக்கப் போகிறீர்கள். இந்த சமயத்தில் உங்களுக்கு பணம் சம்பந்தமாக எந்த இழப்புகளும் வராமல் இருக்க முதலீடுகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய பணம் வீண்விரயமாகாமல் இருக்க வேண்டும் என்றால், புதன்கிழமை தோறும் நீங்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று உங்கள் கையால் அருகம்புல் வாங்கி கொடுத்து விநாயகரை மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இனி வாழ்க்கையில் நல்ல காலம்தான். செய்த தவறுக்கு எல்லாம் மனது வருந்தி இனி உங்களுடைய பயணத்தை ஆன்மீகத்தில் செலுத்துவீர்கள். வியாழக்கிழமை தோறும் நவகிரக கோவிலுக்கு சென்று ராகு கேது பகவானுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்தால் உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் சரியாகும்.

மிதுனம்

புதிய வாய்ப்புகளை அள்ளிக் கொண்டு செல்ல போகும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கப் போகின்றது. உங்களுக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க உங்களால் முடிந்தவரை கோவிலில் இருக்கும் யானைகளுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். ஒரு கரும்பு கட்டு வாங்கி கொடுத்தால் கூட நல்லது தான். உங்கள் வசதிக்கு ஏற்றபடி யானைக்கு தானம் செய்யுங்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்கள் கஷ்டம் தீர வேண்டும் என்றால் உங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும். உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி, உங்கள் குடும்பத்தை காக்கும். பித்ரு தோஷம் விலக, கஷ்டப்படுபவர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் பரிகாரங்கள் செய்தால் அதன் மூலம் முழு பலனை பெறலாம். வரக்கூடிய மஹாலயா அமாவாசை தினத்தன்று ஏதாவது புகழ்பெற்ற கோவிலுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாம். சனிக்கிழமை தோறும் அனுமனுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அளவோடு பேச வேண்டும். கோபத்தோடு வார்த்தையை விடக்கூடாது. உங்களுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்றால் அரச மரத்தடி பிள்ளையார் வழிபாடு செய்யணும். நாக தேவதைகளை சிலைகளாக வைத்திருப்பார்கள் அல்லவா. அந்த சிலைகளுக்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்து குங்குமப்பொட்டு வைத்து வழிபாடு செய்வது நன்மை தரும். இந்த வழிபாட்டை செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நடக்கக்கூடிய நன்மைகளை எல்லாம் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அந்தந்த வயதில் அந்தந்த சந்தோஷத்தை பெற வேண்டும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதை இழக்க வாய்ப்புகள் உள்ளது. நீங்க சர்ப்பம் சார்ந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. கும்பகோணத்தில் இருக்கும் திருப்பாம்புரம், சட்டை  நாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் உங்கள் கஷ்டங்கள் விலகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் படாத பாடு எல்லாம் பட்டு, தெளிந்து வெளியில் வர போகக்கூடிய காலம் இது. ராகு கேதுவுக்கே உரிய ஸ்தலங்கள் எல்லாம் இருக்கும் அல்லவா. அந்த இடத்திற்குச் சென்று பரிகாரம் செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. கேரளாவில் மன்னார்சாலை, வெட்டிக்கோடு என்ற இரண்டு இனங்களில் நாகராஜா நாககணியை சென்று வழிபாடு செய்யலாம். இதை அனந்தன் வாசுகி வழிபாடு என்று சொல்லுவார்கள். முடிந்தவர்கள் இந்த வழிபாட்டை செய்யுங்கள் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் தோல்வியும் சரிசகமாக கிடைக்கும். வெள்ளிக்கிழமை தோறும் நீங்கள் கருமாரியம்மன் வழிபாடு செய்யுங்கள். வியாழக்கிழமை நவகிரக சன்னிதானத்தில் இருக்கும் ராகு கேதுவுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்வது நன்மையை தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் புது மனிதர்களிடம் பழகும் போது உஷாராக இருக்க வேண்டும். யாரையாவது நம்பி மோசம் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது உஷார். நீங்கள் வெள்ளருக்கு விநாயகரை வாங்கி வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வரலாம். வீட்டிற்கு பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையார் கோவில் இருந்தால் அவரை 12 முறை வலம் வரலாம். இதை நீங்கள் கணக்கில்லாமல் தினம் தினம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிறைய நன்மைகளைக் கொடுக்கும். நிறைய ஆடம்பரமான வாழ்க்கையை கொடுக்கும். ஆனால் நீங்கள் அனாவசியமாக அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. நீங்கள் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு ராகு கால நேரத்தில் விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பேச வேண்டும். உங்களுடைய வார்த்தைகள் தான் உங்களுக்கு பிரச்சனை ஆகும். தினமும் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். கோவில்களுக்கு விளக்கு ஏற்ற நெய் சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி தானம் கொடுக்கவும்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது பெயர்ச்சி பலன்கள். 8-10-2023 முதல் 26-04-2025 வரை

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் அசௌகரியமான சூழ்நிலைதான் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை, குடும்பத்தில் சண்டை சச்சரவு பணக்கஷ்டம் இவைகள் எல்லாம் இருக்கும். கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும். நீங்கள் பள்ளி கொண்ட பெருமாளின் பாதங்களில் சரணடையுங்கள். உங்களுடைய பிரச்சனைகள் தீரும். முடிந்தவரை அன்னதானம் செய்யவும்.

- Advertisement -