இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டால், பெண்கள் மகாராணியை போல் வாழலாம்.

Astrology
- Advertisement -

திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே அதில், முக்கிய பங்கு வகிப்பது ஜாதகம். ஏனென்றால், ஒருவருடைய ஜாதக கட்டத்தை வைத்து அவருடைய வாழ்க்கை வரலாறை கூறிவிடலாம். இதனால்தான் ஆயிரம் காலத்து பயிராக கருதப்படும் திருமண பந்தத்தில், சொந்த பந்தங்கள் சொல்வதையெல்லாம் கூட விட்டு விட்டு, முதலில் ஜாதகத்தை பார்க்கிறார்கள் பெற்றோர்கள். அதிலும் குறிப்பாக பெண்கள், தங்களுக்கு வரக்கூடிய கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகமாகவே வைத்திருப்பார்கள். தனக்கு வரப்போகும் கணவர் வசதி படைத்தவராக இருக்கின்றாரா என்பது கூட பெண்களுக்கு அவசியம் இல்லை. ஆனால், தனக்கு வரக்கூடிய கணவர் கடைசி வரை, பாசத்தோடும், பாதுகாப்போடும்,  வாழ்க்கையின் இறுதிக் கட்டம் வரை, கை விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

ஒருவருடைய குண நலன்களை, அவர்களுடைய ராசியை வைத்தும் கணித்து சொல்லி விட முடியும். அந்த வரிசையில், இந்த 6 ராசியை கொண்ட ஆண்கள், திருமண பந்தத்தில் இணையும் போது, தன்னுடைய வாழ்க்கைத் துணையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதற்காக இந்த ஆறு ராசியை கொண்டிராதவர்கள், கெட்டவர்கள் என்பது அர்த்தம் கிடையாது. இந்த ஆறு ராசியை  கொண்டவர்களின் குணாதிசயம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று சொல்கிறது ஜோதிடம். அந்த ஆறு ராசிகள் என்னென்ன? அவர்களுடைய குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் தங்களுடைய குடும்பத்தை பொறுப்போடு பார்த்துக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள். எவரையும் அனுசரித்துப் போகும் குணாதிசயம் இவர்களுக்கு உண்டு. தன்மீது கோபப்படுபவர்களிடமும், அன்பை மட்டுமே வெளிக்காட்டும் குணம் கொண்டவர்கள் ரிஷப ராசி ஆண்கள். தங்களுடைய குடும்ப சந்தோஷத்திற்காக வீட்டு வேலைகளை செய்யக் கூட தயங்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இன்னும் அனுசரித்துப் போகும் மனைவி கிடைத்தால், இவர்களது வாழ்க்கை மிகவும் சுபிட்சமாக அமைந்துவிடும். சண்டை இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ தகுதி உடையவர்கள் இவர்கள்.

கன்னி:
கன்னி ராசியை கொண்ட ஆண்கள் எப்போதுமே நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவார்கள். தன்னை நம்பி வந்தவர்களுக்கு கட்டாயம் துரோகம் இழைக்க மாட்டார்கள். கஷ்டப்படும் சூழ்நிலையில் இருந்தாலும் எப்படியாவது தன்னுடைய குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். பொறாமை என்றால் என்ன? முன் கோபம் என்றால் என்ன? என்பதுகூட இவர்களுக்கு தெரியாது, என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு பொறுமைசாலிகள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியை கொண்ட கணவரை கைபிடித்த பெண்கள் கட்டாயம் அதிர்ஷ்டசாலிகள் தான். தன்னுடைய மனைவியை பற்றி யார் என்ன கூறினாலும், அதை தங்களுடைய காதுகளில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். துலாம் ராசி ஆண்கள், ‘தங்களுடைய மஹா ராணி, தன் மனைவி என்பதில் உறுதியாக இருப்பார்கள்’. மனைவிக்கு மரியாதை கொடுப்பதில் இவர்களை மிஞ்ச வேறு யாரும் இல்லை. இவர்களை அனுசரித்து செல்லும் மனைவி அமைந்துவிட்டால் ராஜ வாழ்க்கை தான். வேறென்ன வேண்டும். நிம்மதியும் சந்தோஷமும் வீட்டில் கட்டாயம் நிறைந்திருக்கும்.

கடகம்:

- Advertisement -

கடக ராசிக்காரர்கள் தங்களுடைய குடும்பத்தை மதிப்போடும் மரியாதையோடும் சீராக நடத்துவதில் மிகவும் திறமையான ஆண்களாக இருப்பார்கள். ஆனால், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் கௌரவமும் சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது, ஒரு ஆண் கணவனாக தன்னுடைய பொறுப்பை சரியாக செய்யும் பட்சத்தில், ஒரு பெண் மனைவியாக தன்னுடைய பொறுப்பையும் சரியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். மற்றபடி இல்லற வாழ்க்கையை எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் நல்வழியில் நடத்திச் செல்வதில் இவர்கள் புத்திசாலிகள் தான்.

சிம்மம்:

சிம்ம ராசியை கொண்ட ஆண்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் தன்மைகொண்டவர்கள். அதாவது, இவர்களுடைய செயல்பாடுகள் அடுத்தவர்களை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகவும் துருதுருவென்று அமைந்திருக்கும். இதனாலேயே இவர்களை பெண்களுக்கு மிகவும் பிடித்து விடும் என்று கூட சொல்லலாம். எப்போதுமே உற்சாகமான நிலையில் இருக்கும் சிம்ம ராசியை கொண்ட ஆண்கள், தங்களுடைய குடும்பத்தை கட்டுப்பாட்டோடு சந்தோஷமாக வைத்து நடத்துவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதேசமயம் இவர்களுக்கு கோபம் ஏற்படும் போது, அதை அனுசரித்து செல்லும் மனைவி இருந்தால் இன்னும் வாழ்க்கை சுபிட்சமாகமாறிவிடும். எக்காரணத்தைக் கொண்டும் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராது.

மேஷம்:
மேஷ ராசியை கொண்ட ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் முன்னேற்றம் எந்தவிதத்திலும் தடைபடாது.  ஏதாவது ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படும் பெண்கள், மேஷ ராசியை கொண்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம். பெண்களின் முன்னேற்றத்திற்கு எக்காரணத்தைக் கொண்டும் மேஷராசிக்காரர்கள் தடையாக இருக்க மாட்டார்கள். கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தாலும், விட்டுக் கொடுப்பதில் முதல் இடம் கொடுப்பவர்கள் கட்டாயம் மேஷ ராசியை கொண்ட கணவன்மார்களாகத்தான் இருப்பார்கள். பெண்களை எப்போதும் பாராட்டிக் கொண்டே இருக்கும் குணம் இந்த ராசியை கொண்ட ஆண்களுக்கு கட்டாயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -