நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதுபோல கடன் இல்லா வாழ்க்கையும் மிகவும் முக்கியமாகும். நமது முன்னோர்கள் ஜோதிடத்தின் மூலம் நமக்கு தேவையான விஷயங்களை சூட்சமமாக சொல்லிவிட்டு தான் சென்றிருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் எந்த கடவுளை வணங்கினால், எந்த பரிகாரம் செய்தால் அவர்கள் கடன் பிரச்சனை தீரும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். “ருண ரோக ஸ்தானம்” என்று அழைக்கப்படும் ஒவ்வொரு ராசியின் ஆறாம் வீட்டை பொருத்தே அவர்களின் மன வலிமை, ஆரோக்கியம், கடன் பிரச்சனை போன்றவற்றை அறிய முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்ன செய்தால் எந்த கடவுளை வணங்கினால் அவர்களின் கடன் தீரும் என்று தெரிந்துகொள்ள இப்பதிவினுள் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்கள் புதன்கிழமை தோறும் துளசியை பெருமாளுக்குப் படைத்து பெருமாளை வணங்கி வருவதன் மூலம் அவர்களின் கடன் பிரச்சனை குறைந்து கொண்டே வரும். இவர்கள் புதன் ஓரையின்போது கடனை திருப்பித் தருவது சிறந்த பலனை அளிக்கும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு மல்லிகையை சமர்ப்பித்து மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி வணங்கி வருவது மிகவும் நன்மையை கொடுக்கும். இவர்கள் வெள்ளை ஆடையை அணிவது சிறந்த பலனைக் கொடுக்கும். சுக்கிரன் ஓரையில் இவர்கள் கடனை அடைக்க ஆரம்பித்தால் விரைவில் அவரது கடன்கள் அடைந்துவிடும்.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்கள் செவ்வாய் ஓரையில் முருகனுக்கு செவ்வரளி மலரை சமர்ப்பித்து, கந்தசஷ்டி பாராயணம் செய்வது அவர்களுக்கு நல்ல அனுகூலத்தை கொடுக்கும். இவர்கள் புதன் மற்றும் சுக்கிரன் ஓரையில் கடனை அடைக்க ஆரம்பித்தால் கடன் பிரச்சனை விரைவில் தீரும்.
கடக ராசி:
கடக ராசிக்காரர்கள் எந்த ஒரு காரியங்கள் செய்வதாக இருந்தாலும் குரு ஓரையில் செய்தால் அவர்களுக்கு நன்மையே நடக்கும். இவர்கள் சிவனை பூஜித்து வணங்கிவர நல்ல மாற்றம் உண்டாகும். குரு ஓரையில் கடனை அடைத்து வந்தால் விரைவில் கடன் முழுவதுமாக அடைந்துவிடும்.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்கள் விநாயகருக்கு அருகம்புல்லை படைத்து, விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை தொழுது வருவதன் மூலம் நல்ல பலனை பெறமுடியும். இவர்கள் சூரியன் மற்றும் செவ்வாய் ஓரையில் கடனை அடைக்க தொடங்குவது மிகவும் சிறந்ததாக இருக்கும்.
கன்னி ராசி:
கன்னி ராசிகார்கள் பைரவர் வழிபாடு செய்வதும், நவகிரகங்கள் வழிபாடு செய்வதும் அவர்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.இவர்கள் புதன், குரு மற்றும் சுக்கின் ஓரைகளில் கடன்களை அடைக்க தொடங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்கள் மகாலட்சுமிக்கு தாமரை மலர் சூட்டி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்தால் அவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இவர்கள் சுக்கிரன் ஓரையில் கடனை அடைக்க ஆரம்பித்தால் கடன்கள் விரைவாக அடைந்துவிடும்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்காரர்கள் கந்த குரு கவசம் சொல்லி முருகனை வழிபடுவதும், வேல் பூஜை செய்வதும் அவர்களின் கடன் பிரச்சனை தீர சிறந்த வழியாகும். இவர்கள் செவ்வாய் மற்றும் குரு ஓரையில் கடனை திருப்பிக் கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்கள் சுமங்கலி பூஜை செய்வதும், மஞ்சள் பொடியால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதும் கடனை அடைப்பதற்கான நல்ல பரிகாரங்களாகும். இவர்கள் குரு மற்றும் சுக்கிரன் ஓரையில் கடன்களை அடைத்து வர கடன் பிரச்சினை முழுவதுமாக தீர்ந்துவிடும்.
மகர ராசி:
மகர ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடு செய்வதும், முன்னோர்களை வணங்குவதும் மிகுந்த நன்மை கொடுக்கும். இவர்கள் வராகி அம்மனுக்கு பூஜை செய்வது கடன் தொல்லை தீர சிறந்த வழியாகும். இவர்கள் புதன் மற்றும் சுக்கிரன் ஓரையில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது நல்ல பலனைக் கொடுக்கும்.
கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்கள் அபிராமி அந்தாதி சொல்லி அம்பாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவர்கள் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஓரையில் கடன்களைத் திருப்பி செலுத்தி வந்தால் கடன் விரைவில் அடைந்துவிடும்.
மீன ராசி:
மீன ராசிக்காரர்கள் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபட்டு வருவதும், ஜீவராசிகளுக்கு உணவு அளிப்பதும் அதிலும் முக்கியமாக மீனுக்கு உணவு அளிப்பது இவர்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும். இவர்கள் குரு மற்றும் செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.