ஹோட்டல் ஸ்டைல் ரவா பொங்கல் செய்முறை

rava pongal
- Advertisement -

நம் தமிழ்நாட்டில் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருளாக திகழ்வதுதான் பொங்கல். அதிலும் குறிப்பாக வெண் பொங்கல் என்பது மிகவும் சிறப்பு கூறியதாக திகழ்கிறது. இந்த வெண்பொங்கலை சாப்பிடுவதற்கு என்றே தனி கூட்டம் இருக்கிறது. வெண்பொங்கல் செய்வதற்கு பச்சரிசியை பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு சில பொருட்களை பயன்படுத்தியும் வெண்பொங்கலை செய்யலாம். அந்த வகையில் இன்று ஹோட்டல் ஸ்டைலில் ரவா பொங்கல் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொங்கல் என்றதும் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் என்றுதான் நம் நினைவிற்கு வரும். ஆனால் இந்த சக்கரை பொங்கலையும், வெண்பொங்கலையும் பச்சரிசிக்கு பதிலாக வேறு பொருட்களை வைத்தும் நாம் தயார் செய்யலாம். சிறு தானியங்களை பயன்படுத்திக் கூட பொங்கலை தயார் செய்ய முடியும். ஆனால் இதற்காக எடுத்துக் கொள்ளும் நேரம் என்பது சற்று அதிகமாகவே இருக்கும். நாம் நினைத்தவுடன் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பொங்கலாக தான் ரவா பொங்கல் திகழ்கிறது. ரவையை பயன்படுத்தி பல டிபன் ஐட்டங்களை செய்வதற்கு பதிலாக இப்படி ரவா பொங்கல் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • ரவை – 1 கப்
  • பாசிப்பருப்பு அரை – 1/2 கப்
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • முந்திரிப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 3 கப்

செய்முறை

முதலில் பாசிப்பருப்பை சுத்தம் செய்து மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து நன்றாக குலைய விட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் அதில் சீரகம், மிளகு, முந்திரி இவற்றை போட வேண்டும்.

முந்திரி நன்றாக சிவந்த பிறகு அதில் கருவேப்பிலை, இஞ்சியை சேர்த்து ரவையை அதில் போட்டு நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு அடுப்பில் மூன்று கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ரவை நன்றாக வறுபட்ட பிறகு அதில் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பையும் சேர்த்து கட்டி இல்லாத அளவிற்கு நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். மணல் பதத்திற்கு வருத்தப்பிறகு நாம் கொதிக்க வைத்திருக்கும் தண்ணீரை இதில் ஊற்ற வேண்டும். அவ்வாறு ஊற்றும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நன்றாக கட்டி இல்லாத அளவிற்கு கலந்து விட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விட வேண்டும்.

தண்ணீர் வற்றி நன்றாக ரவை வெந்த பிறகு கடைசியாக ஒரு ஸ்பூன் அளவு நெய்யை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சுவையான ஹோட்டல் ஸ்டைல் ரவா பொங்கல் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: இரும்புச்சத்து நிறைந்த எள் துவையல்

பத்தே பத்து நிமிடத்தில் எளிமையான சுவையான ரவா பொங்கல் இப்படி செய்து கொடுக்க ரவை பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -