நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமங்கள் இருக்கும். வறண்ட சருமம், எண்ணெய் பிசுபிசுப்பான சருமம், மிதமான சருமம், இயல்பான சருமம் மற்றும் சென்சிட்டிவ் சருமம் என்று ஐந்து வகைகளில் கூறலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு வகையில் நாம் பராமரிப்பு முறையை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த சருமத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் எண்ணெய் பசை மிகுந்த சருமத்தை பராமரிக்கும் முறையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
நம் சருமத்தில் கண்ணிற்கு தெரியாத எண்ணில் அடங்காத சிறு சிறு துவாரங்கள் இருக்கின்றன. அந்த துவாரங்களின் வழியாகத்தான் வியர்வை துளிகள் வெளியில் வருகிறது. அதே போல் தான் அந்த துவாரங்களின் வழியாக என்னையும் சுரக்கிறது இந்த எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக எண்ணெயை சுரந்தால் அந்த சருமத்தை நாம் எண்ணெய் பசை மிகுந்த சருமம் என்று கூறுகிறோம். இந்த சருமத்தை பெற்றிருப்பவர்களுக்கு முகப்பருக்களின் பிரச்சினைகள் அதிகமாக ஏற்படும். மேலும் அவர்களின் முகம் பிரஷ்ஷாக இருக்காது.
எண்ணெய் பசை மிகுந்த சருமத்தை கொண்டவர்கள் அடிக்கடி தங்கள் முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டு கடலை மாவை உபயோகிக்க வேண்டும். அவர்கள் முகத்திற்காக எந்த முகப்பூசை தயார் செய்தாலும் அதில் பாலை சேர்ப்பதற்கு பதிலாக பன்னீரை சேர்த்து தயார் செய்ய வேண்டும். முகத்தை கழுவும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அந்த எண்ணெய் பசையானது குறையும்.
எண்ணெய் சருமம் உடையவர்கள் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது அவர்களுடைய சருமத்தில் அழுக்குகளும், தூசிகளும் மற்ற சருமத்தை விட அதிகமாகவே இருக்கும். அப்பொழுது அவர்கள் ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து அதில் சிறிது எலுமிச்சை பழ சாற்றையும் கலந்து நன்றாக பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள், தூசுகள் அனைத்தும் நீங்கி சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதற்கு தக்காளி பழச்சாறும், வெள்ளரி சாறும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் உலர விட வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகமான எண்ணெய் பசை குறையும். தக்காளி மற்றும் வெள்ளரியில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும், பருக்களையும் தடுக்கும்.
இதையும் படிக்கலாமே: பொலிவான பிரகாசமான முகத்தைப் பெற சார்கோல் மாஸ்க்.
இந்த எளிமையான குறிப்புகளை மனதில் நிறுத்திக் கொண்டு பின்பற்றுவோரின் முகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசைகள் குறைந்து அவர்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.