கால பைரவர் சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் காவல் தெய்வமாக திகழக்கூடியவர். எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக கருதப்படுபவர். மேலும் நம்முடைய கர்ம வினைகளால் பலன்களை தரக்கூடிய சனி ஈஸ்வர பகவானின் குருவாக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட காலபைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. நம்முடைய கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றாலோ எதிரிகளின் தொல்லை விலக வேண்டும் என்றாலோ நமக்கு பாதுகாப்பு கவசமாக காலபைரவர் இருந்து நம்மை காத்து ரட்சிக்க வேண்டும் என்றாலோ தேய்பிறை அஷ்டமியில் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
அதே சமயம் நமக்கு செல்வ வளம் பெருக வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும், ஸ்வர்ண தோஷம் நீங்க வேண்டும், தங்கம் தாராளமாக வந்து சேர வேண்டும், தங்களின் வாழ்க்கை பைரவரின் அருளால் வளமானதாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் ஆணி மாதத்தின் வளர்பிறை அஷ்டமி நாளன்று எலுமிச்சம் பழத்தை வைத்து எப்படி வழிபாடு செய்தால் ஸ்வர்ண தோஷம் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஸ்வர்ண தோஷத்தை நீக்க வழிபாடு
ஆனி மாதத்தின் வளர்பிறை அஷ்டமி என்பது ஜூலை மாதம் இரண்டாம் தேதி பகல் 3 மணிக்கு ஆரம்பித்து ஜூலை மாதம் மூன்றாம் தேதி மாலை 4:30 மணி வரை இருக்கிறது. இந்த அஷ்டமி திதி இருக்கக்கூடிய நேரத்தில் நாம் கால பைரவரை நிச்சயம் கண்டிப்பாக முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளை மட்டும் பெறாமல் அஷ்ட லட்சுமிகளின் அருளையும் நம்மால் பெற முடியும். அன்றைய தினம் புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.
நேராக அருகில் காலபைரவரின் சந்நிதி எந்த ஆலயத்தில் இருக்கிறதோ அந்த ஆலயத்திற்கு செல்லுங்கள். எந்த நேரத்தில் அன்றைய தினத்தில் காலபைரவருக்கு அபிஷேகம் செய்வார்கள் என்பதை கேட்டறிந்து அபிஷேகத்திற்கு வாசனை மிகுந்த பன்னீர், ஜவ்வாது, புனுகு போன்ற பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும். காலபைரவருக்கு செவ்வரளி மலர்களையும் வாங்கி கொடுத்து அந்த எலுமிச்சம் பழத்தை காலபைரவரின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.
காலபைரவரின் பாதத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை வைக்கும் பொழுது “ஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை முழுமனதோடு கூறி காலபைரவர் இடம் ஸ்வர்ண தோஷம் நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைக்க வேண்டும். பிறகு எட்டு முறை பைரவரை வலம் வந்து அவர் பாதத்தில் வைத்து எலுமிச்சம் பழத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். இந்த எலுமிச்சம் பழத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து வீட்டு நிலை வாசலில் மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணியில் வைத்து கட்ட வேண்டும். இந்த எலுமிச்சம் பழம் ஒரு மாத காலம் வரை அப்படியே இருக்கட்டும்.
அடுத்த மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி நாளில் பழைய எலுமிச்சம் பழத்தை எடுத்து ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டுவிட்டு புதிதாக இதே போல் எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து நிலை வாசலில் வைக்க வேண்டும். அருகில் காலபைரவரின் ஆலயம் இல்லை என்பவர்கள் வீட்டிலேயே கால பைரவரை நினைத்துக் கொண்டு வலது கையில் எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு “ஓம் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை முழு மனதோடு 108 முறை கூறிவிட்டு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை மனதார நினைத்து ஸ்வர்ண தோஷம் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நிலை வாசலில் வைக்கலாம்.
இதையும் படிக்கலாமே: விநாயகருக்கு அரச இலை பரிகாரம்
சக்தி வாய்ந்த இந்த எலுமிச்சங்கனி வழிபாட்டை வளர்பிறை அஷ்டமி தினத்தில் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை நினைத்து செய்பவர்களுக்கு ஸ்வர்ண தோஷம் முற்றிலும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.