எப்பொழுதும் காலை உணவிற்கு செய்யும் இட்லி தோசையை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாகவும், விரைவாகவும் சாப்பிடுவார்கள். அப்படி இதுவரையிலும் வெங்காய தோசை, மசாலா தோசை ரவா தோசை இதுபோன்ற சுவையில் தான் தோசையை செய்து கொடுத்திருப்போம். ஆனால் இந்த புதுவிதமான மஷ்ரூம் மசாலா தோசையை இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த மஷ்ரூம் மசாலா தோசையை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 5 பல், கடலை எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், தனி மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், மிளகுத் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் காளானை சுத்தமாக தண்ணீரில் கழுவிக் கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் அதேபோல் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு இவற்றையும் சிறு துண்டுகளாக பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக சிவந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், அரை ஸ்பூன் சீரக தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து தக்காளியை நன்றாக நசுக்கி விட்டு, பின்னர் கழுவி வைத்துள்ள காளானை சேர்த்து நன்றாக கலந்து விட்டு மறுபடியும் மூடி போட்டு வேகவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து இவற்றுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து சிறிது நேரம் அப்படியே வேக வைக்க வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மஷ்ரூம் மசாலா தயாராகிவிட்டது.

அதன்பின் அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து, தோசை மாவை ஊற்றி தோசை தேய்த்து, அதன் மீது செய்து வைத்துள்ள மஷ்ரூம் மசாலாவை நன்றாக பரப்பி விட்டு, தோசை நன்றாக சிவந்தது வந்ததும் தோசையை சமோசா போன்று மடித்து எடுக்க வேண்டும் இதனை அப்படியே தட்டில் பரிமாறி சாப்பிட கொடுத்தால் போதும். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்.