இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த சுவையான முள்ளங்கி சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள்

mullangi
- Advertisement -

எப்பொழுதும் காலை உணவுடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி இவற்றை தான் செய்து கொடுக்கிறோம். ஆனால் சற்று வித்தியாசமாக உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய முள்ளங்கியை வைத்து சுவையான சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள். இட்லி தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். முள்ளங்கி உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப் பலன் அளிக்கிறது. பலரும் முள்ளங்கியை உணவில் ஒதுக்கி வைக்கின்றனர். முள்ளங்கியை சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கூட இவ்வாறு சட்னியாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த முள்ளங்கி சட்னியை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

pottu-kadalai-chutney

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – கால் கிலோ, தக்காளி – இரண்டு, பூண்டு – பத்து பல், வர மிளகாய் – 6, இஞ்சி – சிறிய துண்டு, எண்ணெய் – 3 ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் முள்ளங்கியை தோல் சீவி சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். பின்னர் அதனை காய் துருவலை பயன்படுத்தி நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். அதன் பின் தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

mullangi-2

அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணை காய்ந்ததும் அதில் 10 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஆறு வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழ சாறையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின் அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் துருவி வைத்த முள்ளங்கியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் அறிந்து வைத்துள்ள தக்காளிப் பழத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுப்பை சிறு தீயில் வைத்து முள்ளங்கி மற்றும் தக்காளி நன்றாக வதங்கும் வரை அப்படியே மூடி வைக்க வேண்டும்.

Kadaai

பின்னர் வதக்கிய தக்காளி மற்றும் முள்ளங்கியை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து அவற்றுடன் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த இந்தச் சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

mullangi-chutney1

அதன்பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து ஒருமுறை கலந்து விட்டால் போதும். சுவையான முள்ளங்கி சட்னி தயாராகிவிடும். இவ்வாறு முள்ளங்கியை வைத்து நீங்களும் ஒருமுறை சட்னி செய்து சுவைத்துப் பாருங்கள். மிகவும் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -