உங்க வீட்ல அரிசி மாவு இருக்கா அப்ப உடனே இந்த நீர் உருண்டையை செய்து பாருங்கள். மாலை டீ குடிக்கும் நேரத்தில் இதனையும் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்

neer
- Advertisement -

எப்பொழுதும் அனைவரும் உணவு உண்ணும் நேரம் ஒரு நாளில் மூன்று வேலையாகும். காலை, மதியம், இரவு என்று இந்த மூன்று வேளையும் உணவு உண்கிறோம். ஆனால் மதிய உணவு உண்ட பிறகு இரவு வரும் வரையில் இடையில் நிறைய நேரங்கள் இருக்கின்றன. இந்த நேரத்தில் பசி எடுக்கும் பொழுது நாம் அனைவரும் வீட்டில் டீ போட்டு குடிக்கின்றோம். இந்த டீ போடும் நேரத்தில் அதனுடன் சேர்த்து சாப்பிட இந்த நீர் உருண்டையையும் ஒருமுறை செய்து சுவைத்துப் பாருங்கள். டீ போடும் நேரத்தில் இதனையும் சுலபமாக செய்து விட முடியும். அவ்வாறு இதனை செய்வது மிகவும் எளிமையான வேலையாகும். வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே இந்த நீர் உருண்டையை அட்டகாசமாக செய்து விடலாம். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – அரை கிலோ, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – இரண்டு ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இந்த சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை அரிசி மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் கால் மூடி தேங்காயை தேங்காய் துருவலில் நன்றாக துருவிக் கொள்ள வேண்டும் பிறகு இந்த தேங்காய் துருவலையும் தாளித்து சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை இந்த கலவையில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

தாளித்த பொருட்கள் அனைத்தும் மாவுடன் ஒன்று சேர்ந்து கலந்து வரும் வரையில் இவற்றை நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் ஈரப்பதம் அனைத்தும் நன்றாக வற்றிய பிறகு, அடுப்பை அனைத்து இந்த மாவை கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆற வைக்க வேண்டும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை இட்லி தட்டில் அடுக்கி வைக்க வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து, உருண்டைகள் வைத்துள்ள இட்லி தட்டுகளை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால் போதும். சுவையான நீர் உருண்டை தயாராகிவிடும். இதனுடன் மிளகாய் சட்னி, கார சட்னி சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

- Advertisement -