இந்த வார ராசிபலன் 02/01/2023 முதல் 08/01/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan2
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் அன்றன்று செய்ய வேண்டிய வேலையை, அன்றே முடித்து விட வேண்டும். இதை நாளை செய்து கொள்ளலாம் என்று எக்காரணத்தை கொண்டும் தள்ளிப் போடக்கூடாது. அது உங்களுக்கு பின்னால் பெரிய பிரச்சினையைக் கொண்டு வந்து சேர்த்து விடும். இந்த வாரம் சுறுசுறுப்பு மட்டும் தான் உங்களுக்கு கை கொடுக்கும். சோம்பேறித்தனத்தை தூக்கி பின் பக்கம் போட்டு விடுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடப்பதில் ஒரு சில சின்ன சின்ன தடைகள் வரும். இருந்தாலும் நல்ல காரியம் நிச்சயம் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. கடந்து வந்த கரடு முரடான பாதைகள் இனி ரொம்பவும் மென்மையாக மாறும். பெரிய பெரிய கஷ்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட போகிறீர்கள். ஆனால் வரக்கூடிய காலங்களில் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாரை நம்பியும் பணத்தை கொடுக்காதீங்க. யாரை நம்பியும் புதிய தொழிலில், இதை செய்தால் லாபம் நிறைய கிடைக்கும் என்று உங்களுடைய பணத்தை முதலீடு செய்யாதீர்கள். முன்பின் அனுபவம் இல்லாத விஷயத்தில் காலை வைக்கக்கூடாது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களோடு சுற்றுலா சென்று நேரத்தை கழிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. மருத்துவ செலவு ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன கஷ்டங்கள் வந்து போகும். பண பிரச்சனையின் மூலம் கைமாத்தாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன வாக்குவாதம் நடக்கும். சொந்த தொழில் ஏதாவது ஒரு சின்ன சிக்கலில் மாட்டிக்கொள்ளும். ஆனால் இந்த பிரச்சனைகள் எல்லாம், இந்த வார இறுதிக்குள் சரியாகிவிடும். பிரச்சனைகளை கண்டு பயப்படாதீங்க. உங்களுக்கு அந்த கடவுள் பக்க பலமாக இருப்பார். எதையும் எதிர்த்து நின்று போராடக்கூடிய தைரியத்தை கொண்டு வாருங்கள். அலட்சியம் இருக்கக்கூடாது. கூடுதல் கவனம் இருந்தால் பிரச்சனைகளை சமாளித்து விடலாம். தினம்தோறும் மனதிற்குள் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை சொல்லி வாருங்கள். நல்லதே நடக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு பெரிய பெரிய சிக்கல்கள் கூட இந்த வாரம் சுலபமாக தீர்ந்துவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனாலும் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒருமுறை முடிவு எடுப்பதற்கு முன்பு, பலமுறை யோசிக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் சொல்லக்கூடிய பேச்சை கேட்காதீங்க. சில இடங்களில் உங்களுடைய புத்திசாலித்தனம் உங்களுக்கு பெரிய அளவில் பாராட்டை பெற்றுக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. பயணங்களின் போது கவனம் தேவை. வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. தினம்தோறும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சலான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் உடனடியாக வெற்றியை தராது. ஆனால் முயற்சிகளை கைவிட வேண்டாம். யாரையும் நம்பி பணம் கொடுக்காதீங்க. யார்கிட்டயாவது கடனாகப் பணம் கொடுத்து இருந்தால், அதை நல்லபடியாக பேசி நாசுக்காக திருப்பி வாங்க பாருங்கள். நீங்கள் கடன் கொடுத்த பணம் திரும்ப வராமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கலைஞர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில சமயம் உங்களுடைய புத்தி குறுக்கு வழியே யோசிக்கும். இந்த குறுக்கு வழியை செய்தால், சீக்கிரம் பணம் சம்பாதித்து விடலாம் என்று. ஆனால் அதை மட்டும் செய்யாதீங்க. பிரச்சனை காவல்துறை செல்லும் அளவுக்கு கூட விபரீதமாக விஸ்வரூபம் எடுக்கும் ஜாக்கிரதை. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தினம் தோறும் ஓம் நமசிவாய மந்திரம் சொல்ல வேண்டும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிக கவனம் தேவை‌ எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. முன்கோபம் இருக்கக் கூடாது. வார்த்தைகளை கடினமாக பேசக்கூடாது. முன்கோபத்தால் நீங்கள் செய்யக்கூடிய சின்ன தவறு உங்களுடைய வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவிடும். இருக்கிற வேலையை விடாதீங்க. மேலதிகாரிகள் திட்டினாலும் அனுசரித்து செல்லுங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வரும். கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். மன குழப்பமாகவே இருக்கும். சிக்கல் நிறைந்த வாரம் தான். இருந்தாலும் தினமும் மனதிற்குள் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டே இருங்கள். பெரிய அளவில் பாதிப்புகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயரும் புகழும் உயரப் போகின்றது. நீங்கள் சின்ன வேலை செய்தால் கூட அதை மற்றவர்கள் பாராட்டி தள்ளுவார்கள். மதிப்பும் மரியாதையும் உயரும். புகழின் உச்சரிக்கை செல்ல போகிறீர்கள். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக கொடுக்க முடியாத கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். ஆனால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். குடும்ப உறவுகளில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். காரணம் உறவுகள் பிரிந்து விட்டால் மீண்டும் சேர்வது கடினம் ஆகிவிடும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவது கிடையாது. இந்த மாதம் 3, 4, தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் சிவனை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. சில நல்லதும் நடக்கும். சில கெடுதலும் நடக்கும். கெடுதல் நடந்தால் அதை உங்களுக்கான கர்மா கழிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அச்சச்சோ கெடுதல் நடந்து விட்டதே என்று அதையே எண்ணி எண்ணி வருத்தப்படாதீங்க. உங்களுக்கு கிடைக்காத நல்லது, உங்களுக்கு நல்லதே கிடையாது. அவ்வளவுதான். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சண்டை வந்தால் கணவன் மனைவி யாராவது நிச்சயம் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதியதாக தொழில் தொடங்குவதாக இருந்தால் தொடங்கலாம். சேமிப்பு அதிகரிக்கும் இந்த வாரம் 5ம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் உங்களுக்கு தான் வெற்றி. நீங்கள் போய் ஒரு காரியத்தை தொட்டாலே போதும் அது உங்களுக்கு சாதகமாக அமைந்து விடும். சில பிரச்சனைகளில் சில நேரம் எடுக்கக் கூடாத முடிவை எடுப்பீங்க. ஆனால் அந்த முடிவு கூட உங்களுக்கு சாதகமாக அமையும். அந்த துணிச்சல் உங்களை வாழ்க்கையின் உயரத்துக்கு கொண்டு போய் நிறுத்தப் போகின்றது. இருந்தாலும் எல்லா விஷயத்திலும் துணிச்சலாக இருக்க கூடாது. அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். காதல் திருமணம் கைகூடும். விற்க முடியாத சொத்துக்களை விற்று நிறைய காசு பணம் பார்ப்பீர்கள். எதிர்பாராத பிரச்சனைக்கு உதவ உயிர் நண்பன் கை கொடுப்பான். தினமும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய புகழ் கிடைக்கப் போகின்றது. உங்களுடைய புத்தி கூர்மையை பார்த்து அனைவரும் வியப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். புதுப்புது ஐடியாவா  கழட்டி விட்டுகிட்டே இருப்பீங்க.  சொந்தத் தொழிலில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் அமையும். ஆனால் உங்களுடைய முன்னேற்றம் உங்களுடைய எதிரிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. நீங்கள் எப்போது விழ போகிறீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளை கொஞ்சம் ஜாக்கிரதையாக டீல் செய்ய வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள், பணம் திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியம் நிறைந்த சாப்பாட்டை மட்டும் சாப்பிடுங்க. தினமும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கல் நிறைந்த வாரமாகத் தான் இருக்கப்போகின்றது. நீங்கள் ஒதுங்கி போனாலும் பிரச்சனை உங்களை விடாது. சின்ன சின்ன சிக்கல்களை சந்தித்து தான் ஆக வேண்டும். தேவையில்லாத வாய் தகராறுகள் கைகலப்பு வரை போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் நிதானமாக பொறுமையாக கையாளுங்கள். குடும்பத்தில் எதிர்பாராத வகையில் சின்ன சின்ன குழப்பங்கள் வரும். சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். இருப்பினும் உண்மையை சொல்லி எல்லா விஷயத்திலும் ஒப்புக்கொள்ளுங்கள். பொய் சொல்லி பிரச்சனையை இன்னும் பெருசாக்காதீங்க. யாருக்கும் ஜாமீனாக போய் நிக்காதீங்க. முன்பின் யோசிக்காமல் கடன் வாங்காதீங்க. மன உளைச்சல் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். தினமும் அனுமனை வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானம் தேவை. மூன்றாவது மனிதர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு எதுவும் செய்யாதீங்க. உங்கள் மனதிற்கு எது சரி தவறு என்று படுகிறதோ, அதை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர்கள் உங்களை குழப்பி விடத்தான் செய்வார்கள். எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை முயற்சி செய்ய வேண்டும். இது என்னால் முடியாது இது எனக்கு வராது என்று சோம்பேறித்தனமாக உட்காரக் கூடாது. சோம்பேறித்தனம் உங்களுடைய வாழ்க்கையை இருட்டில் தள்ளிவிடும். சுறுசுறுப்பாக உடம்பில் வியர்வை வடிய வேலை செய்தால் மட்டும் தான் இனி உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம். இல்லை என்றால் அடுத்தவர்களிடம் கையேந்த கூடிய நிலைமை உண்டாகும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இதை மட்டும் செய்தால் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும் என்று யார் ஆசை காட்டினாலும், ஏமாந்திராதீங்க. புதிய முதலீட்டை செய்யாதீங்க. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -