“சர்வம் சிவமயம்” என்பது சைவர்களின் திட நம்பிக்கை. உலகின் தொன்மையான கடவுளாக இருக்கும் சிவபெருமான் பெரும்பாலான புனிதத்தலங்களில் லிங்க வடிவில் தான் வழிபடப்படுகிறார். இதில் எந்த ஒரு சிற்பியினாலும் வடிக்கப்படாத சிவனின் அருளால் தானாக தோன்றிய லிங்கங்கள் கொண்ட கோவில்கள் நாடு முழுவதும் உண்டு. அந்த வகையில் கடற்கரையோரமாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு நன்மைகளை அருளும் “உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி” திருக்கோவில் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
சுயம்புலிங்க சுவாமி கோவில் வரலாறு
கடற்கரை அருகே இருக்கும் சுயம்புலிங்க கோவிலான இது பக்தர் ஒருவர் தினமும் கடம்ப மரமிருந்த இப்பகுதியை கடந்து செல்லும் போது, இக்கோவில் தற்போது இருக்கும் பகுதியில் இடறி விழுந்து கொண்டே இருந்தார். தான் விழுவதற்கு காரணமாக இருந்த கடம்ப மரத்தின் வேறை அவர் வெட்டியெடுத்த போது ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பக்தருக்கு அசரீரியாக தான் இங்கு லிங்க ரூபத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்காக ஒரு கோவில் கட்டுமாறும் அந்த பக்தரிடம் இறைவன் கூற அதன்படியே அவரும் பனையோலையால் கோவில் கட்ட நாளடைவில் மக்களின் உதவியுடன் கற்கள் கொண்டு கட்டப்பட்ட கோவிலாக மாறியது. இந்த ஆலயத்தின் இறைவனாக சுயம்புலிங்கம் இருப்பதால் இவர் சுயம்புலிங்க சுவாமி என அழைக்கப்படுகிறார். பக்தர்கள் அனைவரின் முயற்சியாலும் இக்கோவில் தற்போது சிறப்பான முறையில் கட்டப்பட்டு வருகிறது.
சுயம்புலிங்க சுவாமி தல சிறப்பு
இக்கோவிலின் சிறப்பாக மார்கழி மாதத்தில் 30 தினங்களும் காலை 7 மணிக்கு சூரியனின் ஒளி சுயம்புலிங்க திருமேனியின் மீது விழுவது தான். இக்காட்சியை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலுக்கு அருகே உள்ள கடற்கரையில் நான்கு நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன. இறைவனின் அபிஷேகத்திற்கு இந்நீரையே பயன்படுத்துகின்றனர். இக்கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடி சுயம்புலிங்க ஸ்வாமியை மனமுருக வழிபடுவதாலும், இந்த ஊற்று நீரை பருகுவதாலும் தீராத வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் மனநிலை சம்பந்தமான நோய்களை கொண்டவர்களின் நோய் பாதிப்புகள் நீங்குவதாகவும், துஷ்ட சக்திகளின் பாதிப்புகள், கிரக தோஷங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கை நிலை மேபடுவதாகவும் , குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும் அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக இருக்கிறது.
கோவில் அமைவிடம்
அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரையை ஒட்டிய உவரி என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல திருநெல்வேலியிலிருந்து பேரெழிந்து வசதிகள் உள்ளன.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்
உவரி
திருநெல்வேலி மாவட்டம் – 628 658
தொலைபேசி எண்
9962569495
9384728151
9443722885
இதையும் படிக்கலாமே:
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் சிறப்புக்கள்
இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
English overview:
Here we have Uvari temple history in Tamil.