வடகறி என்றாலே சென்னையில் பிரபலமான ஒரு உணவாகும். இதனை இப்படி செய்தால் என்னும் அசத்தலாக இருக்கும்

vadakari
- Advertisement -

வடைகறி சென்னையில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது ஹோட்டல்களை காட்டிலும் தெருவோர தள்ளுவண்டி கடைகளில் மிகவும் பிரபலம். வடைகறி இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது கடலைப்பருப்பு மற்றும் இதர மசாலா வகைகளை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான சைதாப்பேட்டை வடகறியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1  கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டுப்பல் – 1, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய்  – கால் லிட்டர், சமையல் எண்ணெய் – 2  ஸ்பூன், சோம்பு – 1/2  ஸ்பூன், லவங்கம் – 5, பட்டை – 1 துண்டு, பிரிஞ்சி இலை – 1, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, புதினா –  சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி – 1, மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் –  1 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா –  1/2 ஸ்பூன், உப்பு –  1/2 ஸ்பூன், தேங்காய் – 3 ஸ்பூன், முந்திரிப் பருப்பு – 3, கசகசா – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
வடை கறி செய்வதற்கு ஒரு கப் கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 1 சின்ன வெங்காயம், 1 பல் பூண்டு,  2 காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஊறவைத்து வைத்துள்ள கடலை பருப்பை தண்ணீரை முற்றிலுமாக வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும். அதனை மசால் வடை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு கொள்ளவும்.
நன்றாக வெந்து ஓரளவு பொன்னிறமாக ஆனதும் எண்ணையை வடித்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 ஸ்பூன் சோம்பு, 5 லவங்கம், 1 துண்டு பட்டை, 1 பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்பின்னர் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

- Advertisement -

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கிய பின்னர் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். அதனுடன் 1 பழுத்த தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2  ஸ்பூன் மல்லித்தூள், மற்றும் 1/2 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள வடைகளை சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் துருவிய தேங்காய் 3 முந்திரி பருப்பு மற்றும் 1/2 ஸ்பூன் கசகசா சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் விழுதை கறியுடன் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அனைத்து விடவும். சுவையான வடைகறி தயாராகிவிடும்.

- Advertisement -