வெள்ளிக்கிழமை அன்று செய்யவே கூடாத காரியங்களில் இதுவும் ஒன்று. இது வரைக்கும் நீங்கள் அறிந்திராத தெரிந்திராத, கேள்விப்படாத சில சாஸ்திர குறிப்புகள் உங்களுக்காக.

mahalashmi1
- Advertisement -

வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. அதில் ஒரு சிலவற்றை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இந்த தவறுகளை செய்தால் வீட்டில் கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் வருவதற்கு வாய்ப்புகள்‌ உள்ளது. இதுவரை அறிந்திடாமல் இந்த தவறுகளை செய்திருந்தால் பரவாயில்லை. இனி இந்த தவறுகளை செய்யாமல் இருப்பது நம்முடைய குடும்பத்திற்கு நல்லது.

வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். கூடுமானவரை தலைக்கு குளித்துவிட்டு தலையில் இருந்து முடி வீடு முழுவதும் உதிராமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை வீடு முழுவதும் முடி சிதறிக் கிடப்பது என்பது வீட்டிற்கு தரத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம். தலையை நன்றாகத் துவட்டி விட்டு முடியின் நுனியில் ஒரு முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக வாரத்தில் மற்ற நாட்கள் கூட குளிக்காமல் சமையல் அறைக்கு சென்று சமையலை தொடங்கலாம். கூடுமானவரை வெள்ளிக்கிழமை மட்டுமாவது குளித்துவிட்டு அக்னி தேவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். வேறு வழியே கிடையாது‌. எங்கள் வீட்டில் காலையில் எழுந்து குளிப்பதற்கு நேரமில்லை. 6 மணிக்கு சமையலை தொடங்க வேண்டும். என்ன செய்வது என்று நினைப்பவர்கள் கங்கா ஸ்நானம் செய்து கொள்ளலாம். பல் துலக்கி முகம் கழுவி விட்டு, கையில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு கங்காதேவியை மனதார நினைத்துக்கொண்டு தலையில் அந்த தண்ணீரை தெளித்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சமையலறைக்குள் செல்லுங்கள்

அடுத்தபடியாக புது துணிகளை வெள்ளிக்கிழமை அன்று துவைக்கக் கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். புது துணியை அணிந்து கொள்ளலாம்‌. ஆனால் அந்த புது துணியை தண்ணீரில் போட்டு துவைக்க கூடாது. புது துணியை துவைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை மட்டும் அல்ல, மற்ற எந்த தினங்களாக இருந்தாலுமே நம்முடைய வீட்டை கூட்டி சுத்தம் செய்வோம். இப்படி வீடு கூட்டும் போது, இடையே அவசரமாக வேறு ஏதாவது வேலை வந்து விட்டால், உடனடியாக கையில் இருக்கும் துடைப்பத்தை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு, குப்பையை அப்படியே விட்டுவிட்டு ஓடி விடக்கூடாது. வீட்டை கூட்டி வந்த குப்பையை ஒரு முறத்தில் அள்ளி விட்டு, துடைப்பத்தை ஓரமாக நிற்க வைத்து விட்டு தான் செல்ல வேண்டும். கூட்டும் வேலையை குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று பாதியில் நிறுத்த கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். (எடுத்துக்காட்டுக்கு நாம் கூட்டிக் கொண்டே இருக்கும் போது பாதியில் விட்டு வந்து, சமையல் வேலையை பார்ப்போம். வெளியில் யாராவது கூப்பிட்டால் துடைப்பதை அப்படியே போட்டு விட்டு வெளியே போய் கதை பேசி விட்டு அரை மணி நேரம் கழித்து மீண்டும் கூட்ட தொடங்குவோம். இப்படி செய்யக்கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று. கையில் துடைப்பத்தை எடுத்து விட்டால் வீடு முழுவதும் கூட்டி குப்பையை அள்ளி குப்பை கூடையில் கொட்டி விட்டுத்தான் மறு வேலை.)

உப்பை நம் கைகளால் யாருக்கும் கொடுக்க கூடாது. இது நம் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக வெள்ளிக்கிழமை நம் வீட்டிலிருந்து உப்பு வெளியே செல்லக்கூடாது. ஆனால் ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி விட்டோம். தர்மசங்கடமான நிலை. யாரோ உப்பு கேட்டு விட்டார்கள். உங்களால் கொடுக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. என்ன செய்வது. உப்பை உங்களை விட்டு ஒரு இரண்டு அடி தூரம் தள்ளி கீழே வைத்துவிட்டு, அவர்களை எடுத்து செல்ல சொல்லலாம். ஆனால் அவர்கள் உப்பை எடுப்பதற்கு முன்பு அவர்களிடம் இருந்து ஏதோ ஒரு பொருள் அரிசியோ, பருப்போ, வெல்லமோ ஏதோ ஒரு பொருளை ஒரு கைப்பிடி அளவு வைத்து விட்டு அதற்கு பதிலாக இந்த உப்பை எடுத்து செல்லலாம் என்று ஒரு மாற்று வழி நமக்கு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வேறு வழியே இல்லை என்றால் தான் பண்டமாற்று முறையை பின்பற்ற வேண்டும். கூடுமானவரை வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டிலிருந்து உப்பை வெளியில் கொடுக்காமல் இருப்பதுதான் நல்லது.

பொதுவாகவே இலையில் உப்பு வைக்கும்போது கூட சாப்பாட்டின் மேல் படும்படி வைக்க கூடாது. இலையின் ஒரு ஓரத்தில், ஈரம் இல்லாத இடத்தில் தான் உப்பு வைக்க வேண்டும். அதுவும் கையில் உப்பை பரிமாறக் கூடாது. கரண்டியால் தான் உப்பு பரிமாறப்பட வேண்டும் என்பதும் ஒரு சாஸ்திரம் தான். கூடுமானவரை மேற்சொன்ன விஷயங்களை பின்பற்றி நம்பிக்கை உள்ளவர்கள் பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -