காலை உணவிற்காக நாம் பலவித சட்னிகளை செய்திருப்போம். ஆனால் வேர்க்கடலை சட்னியின் சுவை தனி ரகம் தான். வேர்க்கடலை சட்னியின் சுவையையும் அதன் பயன்களையும் தெரிந்து கொண்டால் இனிமேல் உங்கள் வீடுகளில் காலை உணவில் அதிகம் வேர்க்கடலை சட்னி தான் இருக்கும். வேர்கடலையில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இந்த வேர்க்கடலை சட்னியை எப்படி சுவையாக செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 100 கிராம், தேங்காய் துருவல் – 1/2 மூடி
வர மிளகாய் – 8, புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
வேர்க்கடலை சட்னி செய்முறை:
முதலில் வறுத்த வேர்க்கடலையை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை வேர்க்கடலையாக இருந்தால் அதனை ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுத்து பின்பு பயன்படுத்தலாம்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில், எடுத்து வைத்துள்ள வேர்க்கடலை, துருவிய தேங்காய், வரமிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை வேறு கிண்ணத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பிறகு தாளிக்கும் கரண்டியை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் சிறிதளவு கடுகு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்ததும் அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து விட்டு பிறகு அவற்றை அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவேண்டும்.
இட்லி அல்லது தோசைக்கு இந்த வேர்க்கடலை சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த சுவை மீண்டும் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு அருமையாக இருக்கும். இந்தப் பதிவில் உள்ள படி நீங்களும் உங்கள் வீட்டில் இதனை செய்து இதன் சுவையை சுவைத்து பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.